கோவை: ராஜ வாய்க்கால் மீதான பாலத்தின் கீழ் இருந்த கழிவுகளை கைகளாலே அகற்றி சேவை புரிந்துள்ளனர் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள்.
கோவை: ராஜ வாய்க்கால் மீதான பாலத்தின் கீழ் இருந்த கழிவுகளை கைகளாலே அகற்றி சேவை புரிந்துள்ளனர் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள்.
6.5 கிலோ மீட்டர் நீளமுடைய ராஜ வாய்க்கால் மீது மாநகர பகுதிகளில் 8-க்கு மேற்பட்ட பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு அமைந்துள்ள பாலங்களில் கீழ் சகதிகளும், குப்பைகளும் தேங்கி நீர் வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ளன.
இதனை தூய்மைப்படுத்தும் பணியில் மாநகராட்சி நிர்வாகமும், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்களும் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இந்த பணி நடைபெற்று வருகிறது.
தூய்மைப் பணி
கோவை - பாலக்காடு சாலை மார்க்கமாக பயணிக்கும் ராஜ வாய்க்கால் மீது அமைந்துள்ள பாலத்தில் நேற்று தூய்மைப் பணி நடைபெற்றது. இந்த பணியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த 70-க்கு மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

மூக்கைப்பிடிக்க வைக்கும் துர்நாற்றத்தையும் பொருட்படுத்தாது அந்த தன்னார்வலர்கள் செய்த பணி பாராட்டத்தக்க வகையில் அமைந்தது.
இது குறித்து அந்த அமைப்பைச் சேர்ந்த மணிகண்டன் கூறியதாவது:- எங்கள் அமைப்பு வாரந்தோறும் இவ்வாறான களப்பணியை மேற்கொண்டு வருகிறது. அவ்வாறே, ராஜ வாய்க்கால் மீது அமைந்துள்ள பாலங்களில் கீழ் சேர்ந்துள்ள கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இது போன்ற கழிவுகளை மனிதர்களை கொண்டு அகற்றக்கூடாது என்ற சட்டம் உள்ளதால், கழிவுகளை முழுமையாக அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உபகரணங்கள்
தொழில் நகரமாக உள்ள கோவையில், பல்வேறு தொழிற்சாலைகளும், தொழில்நுட்ப கல்லூரிகளும் அமைந்துள்ளன. அவர்களும், அரசும் முன்வந்து, கழிவுகளை அகற்ற ஒரு இயந்திரம் மற்றும் சரியான உபகரணங்கள் தயாரித்து கொடுக்க வேண்டும்.
இயந்திரங்கள் மட்டும் கிடைத்தால் எங்கள் அமைப்பினரே கழிவுகளை அகற்றிடுவோம். இந்த பணியில் தன்னார்வலர்கள் யாரும் முகம் சுழிப்பதில்லை. எனவே தொழில் துறையினர் மற்றும் அரசு எங்கள் கோரிக்கையை ஏற்று இயந்திரம் தயாரித்துக் கொடுக்க முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
தரமான சமுதாயத்தை உருவாக்கும் பணி அரசின் பணி மட்டுமல்ல என்பதை உணர்ந்து செயலாற்றும் இவர்கள் போன்ற சேவகர்கள் நாட்டிற்கு இன்னும் தேவைப்படுகிறார்கள். தற்போது அவர்கள் விடுத்துள்ள கோரிக்கையை நிறைவேற்றித்தர சமூக அக்கறை கொண்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் முன்வருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.