நீலகிரி: நீலகிரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள மாவட்டமாகும். எங்கும் பச்சை கம்பளம் போற்றியது போல் தேயிலை தோட்டங்கள், அழகிய நீர் வீழ்ச்சிகள், சுற்றுலாத் தலங்கள் என நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்து அளிப்பதால் வருடத்திற்கு லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள மாவட்டமாகும். எங்கும் பச்சை கம்பளம் போற்றியது போல் தேயிலை தோட்டங்கள், அழகிய நீர் வீழ்ச்சிகள், சுற்றுலாத் தலங்கள் என நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்து அளிப்பதால் வருடத்திற்கு லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.
அழிவு
இவ்வாறு உலக புகழ் பெற்ற இம்மாவட்டம் அழிவின் பட்டியலிலும் இடம் பெற்றுள்ள மாவட்டமாகவும் திகழ்ந்து வருகிறது. குறிப்பாக நில நடுக்கம் ஏற்படும் அபாயம், நிலச்சரிவு, வெள்ள பாதிப்புகள் போன்றவை இம்மாவட்டத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த கன மழைக்கு 43 பேர் உயிரிழந்துள்ளனர். 543 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு 800-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தும், 600 ஏக்கர் நில விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியும், சமவெளி பிரதேசங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளும் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
மலைகளை குடைந்தும், மலைகளின் சரிவில் உள்ள மண் வளத்தை வெட்டி எடுத்தும், வனங்களை அழித்தும் கான்கீரீட் கட்டிடங்களாக மாற்றுவதும், ஆடம்பர பங்களாக்கள், காட்டேஜ்கள், ரிசார்ட்டுகள், ரியல் எஸ்டேட் என விதிமுறைகளை மீறுவதும், போன்ற செயல்களே இதற்கு காரணம் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

மலைப் பாங்கான இடங்களில் சாலை வசதி இல்லாவிட்டால் கட்டிடங்கள் கட்ட அனுமதி அளிக்க சட்ட திட்டங்கள் இல்லாத நிலையில், இது போன்ற அனுமதிகள் வழங்க யார் உரிமை அளித்துள்ளார்கள்? என இயற்கை ஆர்வலர்களின் மனக் குமுறலாக இருந்து வருகிறது.
விதிமீறல்
குறிப்பாக ஒரு வீடு கட்ட சுமார் இரண்டு அடிக்கு மட்டுமே மண்வளத்தை வெட்டி எடுக்க வேண்டும் என்ற நிலையில், தற்போது ஆறு முதல் ஏழு அடி வரை விதியை மீறி மண் தோண்டப்படுவதால் பூமியின் இருக்க தண்மை குறைந்து பெரும் நிலச்சரிவுகளைச் சந்திக்கும் நிலைக்கு நீலகிரி மாவட்டம் தள்ளப்பட்டுள்ளது.

அவ்வாறு எடுக்கும் மண் குவியலாக ஒரு இடத்தில் கொட்டுவதாலும், கால்வாய்கள் மற்றும் அணைகளில் சென்றடைவதால் அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைவதால் மின் உற்பத்தி மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது.
மேலும், கால்வாய்களின் அளவு குறைவதால் பெரும் மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இம்மாவட்டம்.

விதிகளை மீறி வெட்டி எடுக்கும் இந்த மண் வளத்தை உடனடியாக போர்க்கால நடவடிக்கையின் பேரில் தடுக்காவிட்டால் வரும் காலங்களில் மிகப் பெரிய அளவிலான பேரிடரை எதிர் கொள்வதோடு மட்டுமல்லாமல், நீலகிரியின் இயற்கை சூழலை அருங்காட்சியகங்களில் புகைப்படமாக மட்டுமே காண முடியும் என்பது சுற்று சூழல் ஆர்வலர்களின் ஆதங்கமாக உள்ளது.

நீலகிரி மாவட்டத்தை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல இது போன்ற விதிமீறல்களுக்கு முற்றுப் புள்ளி வைத்து உயிர்ச்சூழல் மண்டலத்தைப் பாதுகாக்க மத்திய அரசும், மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நீலகிரி மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.