மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் ஏல மண்டிகளுக்கு வரும் உருளைகிழங்கு வரத்து குறைந்தது - போதிய வரத்து இல்லாததால் உச்சத்தை தொட்ட உருளைக்கிழங்கின் விலை, ஒரு மூட்டை 2,150 ரூபாயாக விலை உயர்வு.
கோவை: மேட்டுப்பாளையம் ஏல மண்டிகளுக்கு வரும் உருளைக்கிழங்குகளின் வரத்து குறைவால், ஒரு மூட்டைக் கிழங்கின் விலை புதிய உச்சத்தைத் தொடும் வகையில் உயர்ந்துள்ளது.
மேட்டுப்பாளையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் இயங்கி வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் விளையும் உருளைக்கிழங்குகள் மட்டுமின்றி கர்நாடகா, குஜராத், ஆக்ரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் லாரிகள் மூலம் டன் கணக்கில் உருளைக்கிழங்குகள் கொண்டு வரப்படுகின்றன. இம்மண்டிகளில் தரம் பிரிக்கப்பட்டு ஏல முறையில் விலை நிர்ணயிக்கப்பட்டு, மொத்த வியாபாரிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது, நீலகிரி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு அறுவடை நடைபெற்று வருகிறது. இந்த சீசன் வரும் ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும். வழக்கமாக, இந்த ஜூன் மாத காலகட்டத்தில் மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு தினசரி 500 முதல் 600 டன் வரை உருளைக்கிழங்கின் வரத்து இருக்கும். அப்போது, நீலகிரி கிழங்கின் விலை மூட்டை ஒன்றுக்கு ரூ. 700 முதல் ரூ. 900 வரையே விலை போவது வழக்கம். ஆனால், இவ்வாண்டு தற்போது 50 முதல் 60 டன் வரையே வரத்து உள்ளது. இதனால், இன்றைய நிலவரப்படி நீலகிரி கிழங்கின் விலை 45 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ. 1,600 முதல் ரூ. 2,150 வரை விலை போகிறது. வெளிமாநில கிழங்கின் விலை மூட்டை ஒன்று ரூ. 800 முதல் ரூ. 1,200 வரை விலை போகிறது.

நீலகிரி மாவட்டத்தில் இவ்வாண்டு உருளைக்கிழங்கின் விளைச்சல் குறைவாக இருப்பதே வரத்து சரியக் காரணம் என்கின்றனர் மண்டி உரிமையாளர்கள். மேலும், கடந்தாண்டு போதிய விலை இன்மையால் நஷ்டம் அடைந்த விவசாயிகள், இவ்வாண்டு உருளைக்கிழங்கு விவசாயத்தைக் குறைத்து அதிக அளவில் மலைக்காய்கறிகள் விவசாயப் பணிகளை மேற்கொண்டதால் இந்த விலை ஏற்றம் கண்டுள்ளது. அத்துடன் அண்டை நாடான இலங்கைக்கும் ஏற்றுமதி செய்யும் நீலகிரி உருளைக்கிழங்கின் அளவு உயர்ந்துள்ளதால் இந்த விலை உயர்வு மேலும் தொடர வாய்ப்புள்ளது.