நீலகிரி: உதகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்க காரணமாக இருந்த எச்.பி. ஆரிகவுடரின் 47-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
நீலகிரி: உதகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்க காரணமாக இருந்த எச்.பி. ஆரிகவுடரின் 47-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
நீலகிரி மாவட்டத்தின் முதல் சட்டமேலவை உறுப்பினர், முதல் சட்டமன்ற உறுப்பினர், என்.சி.எம்.எஸ் நிறுவனர், உதகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்க காரணமானவர், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நீலகிரி மாவட்டத்தில், மது விற்பனை செய்யமுடியாத நிலையை ஏற்படுத்தி பூரண மதுவிலக்கை கொண்டு வந்தவர் என பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர் எச்.பி ஆரிகவுடர்.
இவரின் நினைவாக சென்னை மேற்கு மேம்பாலம் ரயில் முன்பு உள்ள சாலைக்கு ஆரிகவுடர் சாலை எனவும், கூடலூர், பண்டிப்பூர் எல்லையை பிரிக்கும் சாலையில் அமைந்துள்ள பாலத்திற்கு ஆரிகவுடர் பாலம் என பெயர் சூட்டி தமிழக அரசு கவுரவித்துள்ளது.
இந்நிலையில், இவரது 47-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. உதகை என்.சி.எம்.எஸ் வளாகத்தில் அமைந்துள்ள இவரது உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், என்.சி.எம்.எஸ் மேலாண்மை இயக்குனர், எச்.பி.ஆரிகவுடர் அவர்களின் குடும்பத்தாரும், என்.சி.எம்.எஸ் நிறுவன அதிகாரிகள் மற்றும் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.