கோவை: தமிழகத்தில் பொறியியல் (பி.இ.,) பட்டப்படிப்பிற்கான தரவரிசைப்பட்டியலில், கோவையைச் சேர்ந்த கீர்த்தனா ரவி என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.
கோவை: தமிழகத்தில் பொறியியல் (பி.இ.,) பட்டப்படிப்பிற்கான தரவரிசைப்பட்டியலில், கோவையைச் சேர்ந்த கீர்த்தனா ரவி என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.
பொறியியல் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு இணையதளத்தில் கடந்த மே 3-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை விண்ணப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜூன் 8-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கும் பணி நடந்தது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ., படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை உயர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார்.

அப்போது, அவர் வெளியிட்ட பேட்டியில்:- ஜூலை 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை மருத்துவ கவுன்சில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டதால், ஜூலை 10-ம் தேதிக்குப் பின்னரே பொறியியல் கலந்தாய்வு தொடங்கும். பொறியியல் கலந்தாய்வில் 1 லட்சத்து 4,453 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். 5,397 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படவில்லை. பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசையில் கோவையைச் சேர்ந்த கீர்த்தனா ரவி முதலிடத்தைப் பிடித்துள்ளார். 2-ம் இடத்தை ரித்விக்கும், 3-வது இடத்தை ஸ்ரீவர்ஷினியும் பிடித்துள்ளனர். முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்கள் 200க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, சில நடைமுறைகளுக்கு பிறகு ரேண்டம் எண் அடிப்படையில் ரேங்க் வழங்கப்படும்.
நடப்பாண்டில் 26 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்தாண்டு பொறியியல் கல்விக் கட்டணத்தில் மாற்றமில்லை. தரவரிசைப் பட்டியலில் தவறு ஏதும் இருந்தால் திருத்திக் கொள்ள ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டது. கலந்தாய்வில் பங்கேற்க உள்ள மாணவர்களின் தொலைபேசிக்கு குறுஞ்செய்தியாக தரவரிசை அனுப்பப்படும். தரச்சான்று பெறாத கல்லூரிக்கான கல்வி கட்டணம் ரூ. 50,000-ம், தரச்சான்று பெற்ற கல்லூரிக்கான கல்வி கட்டணம் ரூ. 55,000-ம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக ஒதுக்கீட்டில் தரச்சான்று பெறாத கல்லூரிக்கான கல்வி கட்டணம் ரூ.85,000-ம், நிர்வாக ஒதுக்கீட்டில் தரச்சான்று பெற்ற கல்லூரிக்கான கல்வி கட்டணம் ரூ. 87,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.
ரேண்டம் நம்பர் என்றால் என்ன..?
ஒரே மாதிரியான கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ரேங்க் நிர்ணயிப்பதில் குழப்பத்தை ஏற்படுத்தும். இதற்குத் தீர்வு காண்பதற்காகவே கலந்தாய்வு விண்ணப்பத்தில் ‘ரேண்டம் நம்பர்’ (random number) என்ற ஒன்றைக் குறிப்பிட்டு இருப்பார்கள். இரண்டு மாணவர்கள் கட் ஆஃப் மதிப்பெண்களில் 200-க்கு 195 எடுத்திருக்கும் போது, அவர்கள் இருவருக்கும் ஒரே ரேங்க் தர முடியாது. அப்போது, கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களில் அதிகமதிப்பெண்கள் பெற்றிருப்பதன் அடிப்படையில் ரேங்க் வழங்கப்படும்.
இந்த மூன்று பாடங்களிலும் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் பெற்றிருந்தால், அடுத்து அவர்களின் பிறந்த தேதியைக் கணக்கில்கொள்வார்கள். அதில் யார் மூத்தவரோ, அவருக்கு முன்னுரிமை. இருவரும் ஒரே தேதி, ஒரே வருடத்தில் பிறந்திருந்தால், அப்போதுதான் இந்த ரேண்டம் நம்பர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இருவருக்கும் வழங்கப்பட்ட ‘ரேண்டம் நம்பரில்’ எவருடையது குறைந்த மதிப்பு உள்ளதோ, அவருக்கு ரேங்கில் முன்னுரிமை தரப்படும். தவிர்க்கவே முடியாத சூழலில்தான் இந்த ரேண்டம் நம்பர் பயன்பாட்டுக்கு வரும்.