கோவை: சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தனர்.
கோவை: சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தனர்.

ஆண்டும் தோறும் ஜுன் 26-ம் தேதி சர்வதேச போதை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் போதை பொருள் குறித்தும் அதை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

அதன் ஒரு பகுதியாக சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி செஞ்சிலுவை சங்கம் முன்பு தொடங்கியது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மற்றும் மாநகர காவல் ஆணையர் பெரியய்யா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

வ.உ.சி மைதானத்தில் நிறைவு பெற்ற இந்த பேரணியில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பாரி போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதேபோல், கருமத்தம்பட்டி அடுத்த கிட்டாம்பாளையத்தில் உள்ள எல்லை பாதுகாப்பு படை வளாகத்தில் இருந்து போதைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. எல்லை பாதுகாப்பு படை வளாகத்தில் தொடங்கிய பேரணியை முகாம் டெப்டி கமாண்டர் கெளரவ் சர்மா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பேரணியானது எல்லை பாதுகாப்பு வளாகத்தில் இருந்து கிட்டாம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி வரை சென்றது ஊர்வலத்தில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்கள் போதை பொருளுக்கு எதிரான வாசகங்களை அடங்கிய பதாகைகளை ஏந்தியும், போதையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு கோசங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.

இதில் 50-க்கும் மேற்பட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
