கோவை: வலுக்கட்டாயமாக மாற்றுச் சான்றிதழ் வழங்கியதாக தனியார் பள்ளியின் மீது மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் புகார் அளித்துள்ள நிலையில், முறையாக பள்ளி வராதக் காரணத்தினால் நடவடிக்கை எடுத்ததாகப் பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
கோவை: வலுக்கட்டாயமாக மாற்றுச் சான்றிதழ் வழங்கியதாக தனியார் பள்ளியின் மீது மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் புகார் அளித்துள்ள நிலையில், முறையாக பள்ளி வராதக் காரணத்தினால் நடவடிக்கை எடுத்ததாகப் பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
கோகுலம் காலனி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் தனியார் நிறுவனத்தில் கிளர்க்காகப் பணியாற்றி வருகிறார். இவரது மகன் தீபக் வடவள்ளி பி.என். புதூரில் உள்ள ஏ.பி.எம் வித்யாலாயா பள்ளியில் கடந்த 7 ஆண்டுகளாகப் படித்து வந்தார். இந்த ஆண்டு 10-ம் வகுப்பு படித்து வருகிறார். குடும்பச் சூழல் காரணமாக இந்த வருடம் கல்வி கட்டணம் செலுத்த பள்ளி நிர்வாகத்திடம் காலஅவகாசம் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், பள்ளி நிர்வாகம் வலுக்கட்டாயமாக மாற்றுச் சான்றிதழ் வழங்கியதாக மாணவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து மாநகராட்சி பள்ளியில் படிக்க மனு அளித்ததாகக் கூறிய அவர்கள், அங்கும் பள்ளியில் சேர்க்க தலைமை ஆசிரியர் சேர்க்க மறுத்துவிட்டதாகக் குற்றம்சாட்டினர். இதனால், தனது மகனின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிட்டதாகக் கூறி, ஏ.பி.எம் வித்யாலாயா பள்ளியின் நடவடிக்கைக் குறித்தும், மாற்றுப்பள்ளியில் சேர்க்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது குறித்து தனியார் பள்ளி நிர்வாகி மணிவண்ணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது :- மாணவன் தீபக் முறையாக பள்ளிக்கு வராமல் இருந்து வந்தார். 10-ம் வகுப்பு தேர்வுக்கு தயார் செய்ய மாணவர்களுக்குப் பாடம் எடுத்து வரும் நிலையில், வகுப்புகளைப் புறக்கணித்ததை தீபக்கின் பெற்றோர்களிடம் தெரிவித்தோம். அவர்களது விருப்பத்தின் பேரிலேயே மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. எது எப்படியோ மாணவனின் பொதுத்தேர்வுகள் பாதிக்கப்படாத வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், எனத் தெரிவித்தார்.