மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனப்பகுதியின் சாலையின் ஓரத்தில் சுற்றுலா பயணிகள் வீசிச் சென்ற பிளாஸ்டிக் கழிவுகளை வனத்துறையுடன் இணைந்து இயற்கை ஆர்வலர்கள் அப்புறப்படுத்தினர்.
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனப்பகுதியின் சாலையின் ஓரத்தில் சுற்றுலா பயணிகள் வீசிச் சென்ற பிளாஸ்டிக் கழிவுகளை வனத்துறையுடன் இணைந்து இயற்கை ஆர்வலர்கள் அப்புறப்படுத்தினர்.
நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் ஊட்டி மற்றும் பிற இடங்களுக்கு சாலை மார்க்கமாக செல்லும் போது மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் மற்றும் கோத்தகிரி சாலைகளை பயன்படுத்துகின்றனர். அப்படி செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் வனத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ள இந்த சாலையின் ஓரத்தில் வாகனங்களை நிறுத்தி பாலித்தின் பைகள் மற்றும் மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை ஆங்காங்கே வீசிச் செல்கின்றனர்.

சிலர் மது அருந்திவிட்டு அந்த பாட்டில்களையும் வீசிச் செல்கின்றனர். அந்த கழிவுகளை தெரியாமல் உண்ணும் வன விலங்குகள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது.
இந்நிலையில், கடந்த கோடை சீசனுக்கு வந்த சுற்றுலா பயணிகள் வீசிச் சென்ற மக்காத குப்பைகள் மற்றும் பாட்டில் கழிவுகளை மேட்டுப்பாளையம் வனத்துறையினர் மற்றும் இயற்கை ஆர்வலர்கள், மாணவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் ஒருங்கிணைந்து குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

பர்லியாறு பகுதியில் இருந்து கல்லாறு வரை சுமார் 15 கிலோ மீட்டர் அளவுக்கு சாலைகளின் இரு புறங்களிலும் இருந்த பிளாஸ்டிக் மற்றும் பாட்டில் கழிவுகளை சுமார் இரண்டு டன் அளவிற்கு சேகரித்து அகற்றினர். மேலும், வனங்களைப் பாதுகாக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் கேட்டுக்கொண்டனர்.
