நீலகிரி: மசினக்குடி பகுதியில் அனுமதியின்றி குட்டி விமானத்தை (ட்ரோன்) பறக்க விட்ட வாலிபர்களுக்கு நீலகிரி மாவட்ட வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
நீலகிரி: மசினக்குடி பகுதியில் அனுமதியின்றி குட்டி விமானத்தை (ட்ரோன்) பறக்க விட்ட வாலிபர்களுக்கு நீலகிரி மாவட்ட வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
கோவையைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனது நண்பர்கள் 9 பேருடன் நீலகிரி மாவட்டம் முதுமலையை சுற்றி பார்க்கவும், தனியார் நிறுவனத்திற்கு விளம்பர படம் எடுக்கவும் 5-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மசினக்குடிக்கு சென்றார். அங்கு உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கிய அவர்கள் நேற்று முன்தினம் காலை முதலே முதுமலை புலிகள் காப்பகத்தை ரகசியமாக ஆளில்லா குட்டி விமானம் (ட்ரோன்) மூலம் வீடியோ எடுத்து வந்துள்ளனர்.
புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மாயர் பகுதிக்கு நேற்று மாலை சென்ற அவர்கள் வனப்பகுதியையும், மாயார் அணை மற்றும் நீர் மின் நிலையத்தையும் வீடியோ எடுத்தனர்.
இதுகுறித்து, தகவல் அறிந்த மசினக்குடி வனச்சரகர் மாரியப்பன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்கள் 10 பேரையும் மசினக்குடி வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து ஆளில்லா குட்டி விமானம் (ட்ரோன்) மூலம் வீடியோ எடுத்த அவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை அபராதமாக விதிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.
அபராத தொகையை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் கோவையை சேர்ந்த சில காவல்துறை உயர் அதிகாரிகளிடம் செல்போனில் பேசினர். அதனையடுத்து, அந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட 10 பேரையும் விட்டுவிடும்படி சிபாரிசு செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மசினக்குடி வனத்துறையினர் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் வீடியோ எடுத்தவர்களுக்கு சிறிய தொகையாவது அபராதம் விதிக்க வேண்டும் என்பதற்காக சந்தோசுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து வசூலித்தனர். அத்துடன் ஆளில்லா குட்டி விமானத்தை இயக்கிய கோவையை சேர்ந்த அகமது மற்றும் அவரது நண்பருக்கு தலா ஆயிரம் வீதம் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.