திருப்பூர்: கமலஹாசன் தேச நலனுக்கு எதிராக செயல்படுபவர்களைத் தான் தொடர்ந்து சந்தித்து வருகிறார் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பூர்: கமலஹாசன் தேச நலனுக்கு எதிராக செயல்படுபவர்களைத் தான் தொடர்ந்து சந்தித்து வருகிறார் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று திருப்பூர் கே.வி.ஆர் நகரில் நிர்வாகிகள் கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலம் கொடுப்பவர்களுக்கு அரசு மிகப்பெரிய தொகை வழங்குகிறது. ஆனால் அரசு, நிலத்தை பிடுங்குவதாக நாட்டின் வளர்ச்சியில் அக்கறை இல்லாதவர்களால் வதந்தி பரப்படுகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூக பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வரும் ஆளுநருக்கு கறுப்புக்கொடி காட்டுவதன் மூலம் தி.மு.க., தமிழக மக்களுக்கான துரோகத்தை செய்கிறது. தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என தெரிவித்த கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வரும் போது எதிர்ப்பு தெரிவிக்காத தி.மு.க., ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது உள்நோக்கம் கொண்டது.
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் அர்ச்சகர்களால் வைக்கப்பட்ட சந்தனம் குங்குமத்தை ஸ்டாலின் அழித்தது பெரும்பான்மை மக்களை வருத்தமடையச் செய்துள்ளது. அச்செயலை இந்து மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
கமலஹாசன் ராகுலை சந்திப்பது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. தொடர்ந்து தமிழக நலனுக்கு எதிரானவர்களான கேரளா முதலமைச்சர் பினரயி விஜயன், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மற்றும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஆகியோரை அவர் சந்தித்து வருகிறார். அதன் மூலம் அவருடையது பெரிய கட்சி என்ற மாயையை ஏற்படுத்த முயல்கிறார்." என்றார்.