கோவை: கண் பார்வையற்றவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பாதுகாப்பு உரிமைச்சட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கவில்லை எனில் தமிழக அரசு மீது வழக்கு தொடர இருப்பதாக தேசிய பார்வையற்றோர் இணையத்தின் பொதுச்செயலாளர் எஸ்.கே ருங்கடா தெரிவித்தார்.
கோவை: கண் பார்வையற்றவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பாதுகாப்பு உரிமைச்சட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கவில்லை எனில் தமிழக அரசு மீது வழக்கு தொடர இருப்பதாக தேசிய பார்வையற்றோர் இணையத்தின் பொதுச்செயலாளர் எஸ்.கே ருங்கடா தெரிவித்தார்.
கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
கண் பார்வையற்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டை தமிழக அரசு இதுவரை செயல்படுத்தவில்லை. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த இட ஒதுக்கீட்டை ஆறு மாதத்திற்குள் செயல்படுத்த வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் முறையாக அமல்படுத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தியுள்ளது. இந்த விசயத்தில் தெளிவான புள்ளி விபரங்கள் கூட தமிழக அரசிடம் இல்லை. உச்ச நீதிமன்றம் கடந்த 2013-ம் ஆண்டு வழங்கிய ஆணையின் படி மத்திய மாநில அரசுகள் பார்வையற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படாததால் மத்திய அரசின் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்காத தமிழக அரசு மீதும் வழக்கு தொடர தயாராக இருக்கிறோம். வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் கண் பார்வையற்றவர்களுக்கு உணவு பாதுகாப்பு, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு உள்ளிட்ட வசதிகளையும் தமிழக அரசு கட்டாயம் செய்து தர வேண்டும்.
கண்பார்வையற்றோர் படிக்கும் வகையில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் பிரெய்லி புத்தகத்தை ஒரு மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு பார்வையற்றவர்களுக்கான உரிமைகளை வழங்க மறுத்தால் அரசின் மீது வழக்கு தொடர வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
பார்வையற்றவர்களுக்கு சலுகைகள் வழங்காத ராஜஸ்தான் மற்றும் சத்திஸ்கர் அரசு மீது அந்தந்த உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.