கோவை: கிருஷ்ணகிரி மாவட்டம் திட்டகோட்டி அருகே 110 கே.வி புதிய டவர் லைன் நடும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர் கம்பி அறுந்து 100 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்தார்.
கோவை: கிருஷ்ணகிரி மாவட்டம் திட்டகோட்டி அருகே 110 கே.வி புதிய டவர் லைன் நடும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர் கம்பம் உடைந்து (சேனல்) 100 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் பள்ளபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (45). மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணி புரிந்து வரும் இவர் கடந்த சனிக்கிழமை அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் திட்டகோட்டி அருகே 110 கே.வி புதிய டவர் லைன் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது டிஸ்க் (disk) என சொல்லக்கூடிய உதிரி பாகத்தை ஏற்றும் போது கம்பம் உடைந்து (சேனல்) 100 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மின்சார உதிரி பாகங்கள் தரமற்றதாக இருந்த காரணத்தினால் தான் கம்பம் உடைந்து கீழே விழுந்தாக தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து அச்சங்கத்தில் கோவை மண்டல செயலாளர் நாகராஜ் கூறுகையில், "தரமற்ற உதிரி பாகங்களால் ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு காரணமான அதிகாரியை தண்டிக்க வேண்டும். இறந்த ஒப்பந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும். அதே போல் அரசு தரப்பில் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்." என்றார்.
பெரியசாமியின் குடும்பத்திற்கு தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பாக நிதி திரட்டப்பட்டு அவரது குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.