கோவை: கோவை சிங்காநல்லூரில் ஏ.டி.எம்மில் ஸ்கிம்மர் மற்றும் கேமராவை பயன்படுத்தி பொதுமக்கள் பணத்தை நூதனமாக கொள்ளையடித்த கொள்ளையர்களை கோவை மாநகர தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை: சிங்காநல்லூரில் ஏ.டி.எம். இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி மற்றும் காமிராவை பயன்படுத்தி பொதுமக்கள் பணத்தை நூதனமாக கொள்ளையடித்த ஆறு பேரை கோவை மாநகர தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் மண்டல மேலாளர் தங்களது வங்கி ஏ.டி.எம்.,களில் ஸ்கிம்மர் மற்றும் காமிரா பொருத்தி வாடிக்கையாளர்களின் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் ஆய்வாளர் மல்லிகா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
கண்காணிப்பு காமிரா காட்சிகளின் அடிப்படையில் தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர். அப்போது, இந்த கொள்ளையில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த வசிம் மற்றும் தமிழரசன், திருச்சியைச் சேர்ந்த கிஷோக், இலங்கையைச் சேர்ந்த லவசாந்தன், திருப்பூரைச் சேர்ந்த மனோகரன், சென்னையைச் சேர்ந்த நிரஞ்சன் ஆகியோர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இவர்கள் ஆறு பேரையும் கிருஷ்ணகிரி மாவட்டம் டோல் பிளாசா அருகே உள்ள தனியார் ஓட்டல் அருகில் வைத்து போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில், கோவையில் ஏ.டி.எம்., இயந்திரங்களில் ஸ்கிம்மர் மற்றும் காமிரா பொருத்தி, அதன் மூலம் பல வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடி, போலியான ஏ.டி.எம்., கார்டுகளை உருவாக்கி பல இடங்களில் சுமார் ரூ.19 லட்சம் வரை பணத்தை திருடியது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, கொள்ளையடிக்கப் பயன்படுத்தப்பட்ட இரண்டு லேப்டாப், 17 செல்போன்கள், 20 ஏ.டி.எம் கார்டுகள், 40 கிராம் தங்க நகைகள் மற்றும் இரண்டு சொகுசு கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏற்கனவே, தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ஆந்திரா போன்ற பல்வேறு இடங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

தொடர்ந்து, கைது செய்யப்பட்ட ஆறு பேரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.