திருவள்ளூர்: தன்னை ஓர் ஆசிரியராகப் பார்க்காமல் அண்ணன் தம்பியைப் போலவே பார்த்ததாக ஆசிரியர் பகவான் தெரிவித்தார்.
திருவள்ளூர்: தன்னை ஓர் ஆசிரியராகப் பார்க்காமல் அண்ணன் தம்பியைப் போலவே பார்த்ததாக ஆசிரியர் பகவான் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் இளம் வயது ஆங்கில ஆசிரியர் பகவான். 5 ஆண்டுகளாக அதே பள்ளியில் பணியாற்றியதால் பொது மாறுதலுக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொண்டார். அதில் பகவானுக்கு வேறு பள்ளிக்கு மாறுதலுக்கான உத்தரவு வழங்கப்பட்டது.
பகவான், இடமாறுதல் ஆகி இருப்பதை அறிந்ததும் மாணவர்களும், பெற்றோர்களும் துயரத்தில் ஆழ்ந்தனர். மிகச்சிறந்த ஆசிரியர், அவர் மாறுதலாகி செல்லக்கூடாது என்று போராட்டம் நடத்தினார்கள். பள்ளிக்கூடத்துக்கே பூட்டு போடும் அளவுக்கு போராட்டம் தீவிரமடைந்தது.

இந்த நிலையில், இடம் மாறுதலுக்கான கடிதத்தை வாங்கி செல்வதற்காக ஆசிரியர் பகவான் பள்ளிக்கு சென்றார். அங்கு அவரை சூழந்து கொண்ட குழந்தைகள் அவரது பிரிவை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறினார். ஆசிரியரை மாற்றக் கூடாது என்று தலைமையாசிரியர் அரவிந்த்திடம் மாணவர்களின் பெற்றோர்கள் முறையிட்டனர். அதைத் தொடர்ந்து இடமாறுதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் பகவான் பேசுகையில், மாணவர்களிடம் நான் ஆசிரியராக ஒருபோதும் நடந்து கொண்டதில்லை. மாணவர்களுடைய எண்ணத்துக்கு ஏற்றாற்போல் பாடம் நடத்துவேன். போரடிக்கிறது என்று சொன்னால் அவர்களுக்குக் கதை சொல்வேன். யாரையும் நான் கண்டிக்க மாட்டேன். யாரையும் அடிக்கவும் மாட்டேன். மாணவர்களுடைய பிறந்தநாள் அல்லது உடல் நலம் சரியில்லாதபோது மாணவர்களுக்குத் தன்னுடைய சொந்த செலவிலேயே அனைத்து உதவிகளையும் செய்து தருவேன், என்றார்.

மேலும், மாணவர்கள் அவர்களது வீட்டில் தனக்காகவே சமைத்து சாப்பாடு கொண்டு வருவார்கள். அது தவிர மாணவர்களின் வீட்டில் என்ன செய்தாலும் எனக்காகப் பெற்றோர்கள் கொடுத்து அனுப்புவார்கள். அந்தக் கிராமத்தில் உள்ள மாணவர்களின் ஒட்டுமொத்த குடும்பங்களிலும் நான் ஒரு குடும்ப உறுப்பினராக விளங்குகிறேன். இதனாலேயே மாணவர்களுக்கு என்மீது பாசமும் பற்றும் அதிகமாகின. அதனால்தான் எனக்கும் மாணவர்களை நிறைய பிடிக்கும். அவர்களும் என்னை ஓர் ஆசிரியராகப் பார்க்காமல் அண்ணன் தம்பியைப் போலவே பார்த்தார்கள் என்று ஆசிரியர் பகவான் தெரிவித்தார்.