கோவை: உயிரிழப்புக்களை தடுக்கும் பொருட்டு ரயில் நிலையத்தில் செல்பி எடுத்தால் ரூ.2000 அபராதம் என்கிற புதிய சட்டம் நடைமுறையில் வர உள்ளது.
கோவை: உயிரிழப்புக்களைத் தடுக்கும் பொருட்டு ரயில் நிலையத்தில் செல்பி எடுத்தால் ரூ.2000 அபராதம் என்கிற புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று சர்வதேச செல்பி தினம் கொண்டாடப்பட்டது. உலகம் முழுக்க மக்கள் இதற்காக வித்தியாசமான செல்பி போட்டு கொண்டாடிக்கொண்டு இருந்தனர். அதற்கு மறுநாளே இன்று, இந்தியாவில் வித்தியாசமான சட்டம் ஒன்று அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.
அதன்படி, இனி ரயில் நிலையங்களில் செல்பி எடுத்தால் ரூ. 2000 அபராதம் விதிக்கப்படும் என்றும் ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. ரயில் நிலையத்திற்கு வெளியே மட்டுமே இனி செல்பி எடுக்க முடியும்.
சில நாட்களுக்கு முன், ஒரு இளைஞர் ரயிலுக்கு முன் செல்பி வீடியோ எடுக்க சென்று பலியானார். இதே போல் செல்பி வீடியோ எடுக்க முயன்ற பலர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின் படி ரயில் நிலைய வளாகத்தில் குப்பை தொட்டியை தவிர, பிற இடங்களில் குப்பை போடுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.