கோவை: முன்னாள் பிரதமருடன் இந்தியா முழுக்க நடைபயணம் மேற்கொண்ட கோவையை சேர்ந்த முதியவர் கேட்பாரின்றி பிளாட்பாரத்தில் உயிரிழந்த சம்பவம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவை: முன்னாள் பிரதமருடன் இந்தியா முழுக்க நடைபயணம் மேற்கொண்ட கோவையை சேர்ந்த முதியவர் கேட்பாரின்றி பிளாட்பாரத்தில் உயிரிழந்த சம்பவம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கிலிராஜன் (75). ஜனதா தளத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் கடந்த 1982-ம் ஆண்டு அன்றைய பிரதமர் சந்திரசேகருடன் கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை நடைபயணம் மேற்கொண்டார்.

குறைகள்
மக்களின் குறைகளை கேட்டறியும் பொருட்டு நடத்தப்பட்ட இந்த மூன்று மாத நடைபயணத்தில் பல மாநிலங்களுக்குச் சென்று மக்களின் அத்தியாவசிய தேவைகளையும் பிரச்சனைகளையும் கேட்டறிந்தார்.

இவருக்கு காமராஜர் மீது ஈடுபாடு அதிகமாக இருந்தது. இதன் காரணமாக குனியமுத்தூர் பகுதியில் காமராஜர் தேசிய மன்றத்தை தொடங்கினார். திருமணம் செய்து கொள்ளாத சங்கிலிராஜன் தனது எலக்ட்ரீசியன் பணியோடு, மன்ற பணிகளையும் கவனித்துக் கொண்டு, காமராஜரின் கொள்கைகளை பரப்பி வந்தார்.
மன்றமே வீடு
உடன் பிறந்தவர்கள் இருந்த போதும், அந்த காமராஜர் மன்றமே இவரது வீடாக இருந்தது. தினமும் மன்றத்தின் மாடியிலேயே படுத்து உறங்கி வந்த இவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. முதுமை காரணமாக மாடிப்படி ஏறமுடியாத சூழலும் ஏற்படவே, அருகில் உள்ள பிளாட்பாரத்தில் படுத்துறங்க தொடங்கினார் சங்கிலிராஜன்.
இப்படி ஒரு மனிதர் இருப்பது சிம்ப்ளிசிட்டி செய்தி குழுவுக்கு தெரியவந்தது.

அவருக்கு உதவி செய்யும் பொருட்டு ஒரு செய்தி வெளியிட இன்று புறப்பட்டோம். அவரது மன்றத்தின் அருகே வெகுஜனங்கள் கூடியிருக்க, சங்கிலிராஜன் குறித்து விசாரிக்க, அங்கு கூடிருந்த மக்கள் அதிர்ச்சி கொடுத்தனர். மேலும், அங்கு சென்று பார்த்த போது அந்த மனிதர் பிளாட்பாரத்தில் உயிரின்றி கிடந்தார்.
கண்கள் கலங்க வெளியேறிய போது, மக்கள் கூட்டம் அவரது பெருமையை பறைசாற்றிக் கொண்டிருந்தது காதுகளின் ஓரம் வந்து விழுந்தது.