திருப்பூர்: பொதுமக்களுக்கு இடையூறாக புதிதாக மதுபானக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: பொதுமக்களுக்கு இடையூறாக புதிதாக மதுபானக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாநகராட்சியின் 51-வது வார்டுக்கு உட்பட்ட திருப்பூர்-தாராபுரம் சாலையில் வேலாயுதசாமி மண்டபம் எதிரில் உள்ள காலி இடத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.
கடை திறப்பதற்கு அப்பகுதியினர் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு புதிய கடை திறக்கப்பட்டு மது விற்பனை நடந்தது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், பெண் தொழிலாளர்கள் தங்கும் விடுதி அருகிலே உள்ள நிலையில், புதிய டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என்று கூறி அங்கு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் மற்றும் டாஸ்மாக் அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கடையை அகற்றிக்கொள்வதாக அலுவலர்கள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.