தர்மபுரி: விவசாய நிலங்களை பாதிக்கும் சேலம் - சென்னை இடையிலான 8 வழி பசுமை சாலையை எதிர்த்து தர்மபுரியை அடுத்த பாப்பிரெட்டிப்பட்டியில் 3 குடும்பங்களை சேர்ந்த 9 பேர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி: விவசாய நிலங்களை பாதிக்கும் சேலம் - சென்னை இடையிலான 8 வழி பசுமை சாலையை எதிர்த்து தர்மபுரியை அடுத்த பாப்பிரெட்டிப்பட்டியில் 3 குடும்பங்களை சேர்ந்த 9 பேர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை - சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீட்டில் 277 கி.மீ., தொலைவில் புதிய 8 வழி பசுமை விரைவுச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இச்சாலையால் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான விளை நிலங்கள், வீடுகள், பாசன கிணறுகள் பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கையகப்படுத்தப்படும் நிலங்களின் விபரங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
எனவே, இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பின் சார்பில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், போராட்டத்தை ஒடுக்குவதற்கான நடவடிக்கையில் அரசும் கடும் தீவிரம் காட்டிவருகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் 8 வழி பசுமை விரைவுச்சாலை 56 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட உள்ளது. இதற்காக 1,846 விவசாயிகளிடம் 439 ஹெக்டேர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது. இதற்கான நிலங்களை அளவீடு செய்து, முட்டுக்கல் நடும் பணிகள் தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், சந்திரகுமாரின் என்பவரின் நிலத்தை அளந்த அதிகாரிகள் கற்களை நாட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரும், அவரது மனைவி மணி, மகன்கள் பாலன், தமிழரசன் மகள் சுபா ஆகியோர் உடலில் மண்ணெண்ணை ஊற்ற முயன்றனர். இதேபோல் அதே பகுதியை சேர்ந்த வேலன் என்பவரின் குடும்பத்தினர் உள்பட 9 பேர் தீக்குளிக்க மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்ததால் பதற்றம் மேலும் அதிகரித்தது.
ஒரே நேரத்தில் 3 குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அறிந்ததும், கிராம மக்கள் அப்பகுதியில் திரள ஆரம்பித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், நிலத்தை அளவீடு செய்வதை கைவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.