நீலகிரி: காலில் காயங்களுடன் கூடலூர் வந்த பத்து வயது மதிக்கத்தக்க புலி ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.
நீலகிரி: காலில் காயங்களுடன் கூடலூர் வந்த பத்து வயது மதிக்கத்தக்க புலி ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பாடந்துறை, கடிசனகொல்லி வனப்பகுதியில் இன்று காலை வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் புலி இறந்து கிடப்பதை பார்த்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு கூடலூர் வன அலுவலர் ராகுல் தலைமையில் அதிகாரிகள் சென்று இறந்த புலியின் உடலை ஆய்வு செய்தனர்.

அப்போது புலியின் கால்களில் காயம் இருந்தது. இந்த நிலையில் இறந்த புலியின் உடலை மீட்ட வனத்துறையினர் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக கூடலூர் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். சம்பவம் நடந்த இடம் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி உள்ளதால், அங்கிருந்து இந்த புலி வந்திருக்க அதிக வாய்ப்பு இருக்கலாம் என்றும், புலியின் பிரேத பரிசோதனை நாளை காலை நடைபெறும் என்றும் அதன் பின்னரே இறப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.