கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட காளப்பட்டி பகுதியில் ஓடை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து பாலம் கட்டுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட காளப்பட்டி பகுதியில் ஓடை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து பாலம் கட்டுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாநகராட்சியின் 36-வது வார்டுக்கு உட்பட்ட மோகன் கூட்டுறவு நகரில் உள்ள தனியார் தோட்டத்திற்கு செல்ல பாதை இல்லாததால், ஓடை நிலத்தில் பாலம் கட்ட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறப்பட்டது. ஆனால், நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி கொடுக்க கோவை மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் அதிகாரம் கொடுக்கவில்லை. இருப்பினும், ஓடை புறம்போக்கு இடத்தில் பாலம் கட்ட மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியதால் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், வரைபடத்தை ஆய்வு செய்து கட்டுமான பணிகளை தொடர மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால், பொதுப்பணித் துறையினர் தொடர்ந்து, பாலக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து, ஓடை இடத்தை ஆக்கிரமித்து பாலம் கட்டப்படுவதைக் கண்டித்து விவசாயி ராயப்பன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். கடந்த 14-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மாநகராட்சிக்குட்பட்ட 36-வது வார்டு பகுதியில் ஓடை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து பாலம் கட்டுவதற்கு நீதிபதிகள் தடைவிதித்துள்ளனர்.
ஆனால், நீதிமன்றத் தடை விதித்த பிறகும், கடந்த ஒரு வாரமாக இரவு, பகலாகப் பாலம் கட்டும் பணிகள் இன்று வரை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் தியாகராஜன் கூறுகையில், "'நீர்நிலைகளில் எந்தவித கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது என ஏற்கனவே உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதனையும் மீறி ஓடை நிலத்தை ஆக்கிரமித்து பாலம் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, பொதுப் பணித்துறையினர் பாலக் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகளை நிரந்தரமாக தடுக்க சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.