கோவை : கோவை மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி, பில்லூர், ஆழியார் ஆகிய அணைகள் நிரம்பியுள்ள நிலையில், குடிநீர் விநியோகிக்கப்படும் நாட்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கோவை : கோவை மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி, பில்லூர், ஆழியார் ஆகிய அணைகள் நிரம்பியுள்ள நிலையில், குடிநீர் விநியோகிக்கப்படும் நாட்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு சிறுவாணி, பில்லூர் 1, பில்லூர் 2, ஆழியார் கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் கவுண்டம்பாளையம்-வடவள்ளி திட்டம் ஆகியவற்றின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த மே 28-ம் தேதி முதல், தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. மழைப் பொழிவு காரணமாக அணைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. நேற்றைய நிலவரப்படி சிறுவாணி அணை 38/50அடியாக உள்ளது. பில்லூர் அணை 97/100 அடியாக உள்ளது. ஆழியார் அணை 60/120 அடியாக உள்ளது.

மழைப்பொழிவு காரணமாக அணையின் நீர்மட்டங்கள் உயர்ந்தும், நகரில் 5 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே வழங்கப்படுகிறது.
"நகரின் பல பகுதிகளில் குடிநீர் விநியோக குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் சாக்கடையோடு கலந்து வீணாகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக நகரில் நல்ல மழைப் பொழிவு இருந்தும், 12 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. கோடைக் காலத்தை போலவே இப்போதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், நாங்கள் கடும் அவதி அடைந்து வருகிறோம்," என்று புகாரளிக்கிறார் பீளமேட்டைச் சேர்ந்த லட்சுமன்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "மாநகராட்சி பகுதிகளில் 4 அல்லது 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மழைப் பொழிவு காரணமாக அணைகள் நிரம்பி வருகின்றன. தற்போது வரை குடிநீர் விநியோகத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வரும் நாட்களில் அணைகளின் நீர்மட்டத்தைப் பொருத்து குடிநீர் விநியோக நாட்கள் அதிகரிக்கப்படும்," என்றனர்.