கோவை: அ.தி.மு.க.,வினர் மீது தாக்குதல் நடத்தி, சாலை மறியலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட அ.ம.மு.க., தொண்டர்களை இன்று கோவை நீதிமன்றத்தில் வைத்து அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் சந்தித்தார்.
கோவை: அ.தி.மு.க.,வினர் மீது தாக்குதல் நடத்தி, சாலை மறியலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட அ.ம.மு.க., தொண்டர்களை இன்று கோவை நீதிமன்றத்தில் வைத்து அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் சந்தித்தார்.
வடவள்ளி பகுதியில் கடந்த மே மாதம் அ.தி.மு.க., மற்றும் அ.ம.மு.க., கட்சி தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலுக்கு காரணமான அ.தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அ.ம.மு.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு சென்ற போலீசார், அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக கூறி 56 பேர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையிலடைத்தனர்.
அவர்கள் அனைவரும் இன்று கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டனர். அப்போது அவர்களை அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- திவாகரன் கட்சி ஆரம்பித்து இருப்பதால் ஒன்றும் பிரச்சினை இல்லை. மக்கள் தான் தீர்ப்பு சொல்வார்கள். மேலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் யாரும் அதிருப்தியில் இல்லை. ஆட்சியை தக்க வைத்தால் போதும் என்ற நிலையில் மத்திய அரசு சொல்படி கேட்டு செயல்படுகின்றது. எந்த தேர்தல் வந்தாலும் பா.ஜ.க., அ.தி.மு.க., ஆகிய கட்சிகளை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டம் என்பது தேவையில்லை. இதற்கு ரூ. 10 ஆயிரம் கோடி செலவு செய்யப்படுவது வீணானது. இந்த திட்டத்திற்கு பதிலாக சென்னை - கன்னியாகுமரியை 8 வழி சாலையாக்கலாம். நீதிமன்றத்திற்கு எந்த தீர்ப்பு முதலில் வழங்கப்பட வேண்டும் என்பது கூட தெரியாதா? 18 எம்.எல்.ஏ.,க்கள் தீர்ப்பை ஏன் இதுவரை நீதிமன்றம் வெளியிடவில்லை? மத்திய அரசு சொன்னால்தான் தீர்ப்பை வெளியிடுமா?
எம்.எல்.ஏ.,க்கள் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பை உடனே வழங்க வேண்டும். தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மக்கள் மன்றத்தை நாட நாங்கள் தயாராக இருக்கின்றோம். காவிரி டெல்டா பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. காவிரி டெல்டா பகுதி முக்கியமா? அல்லது சென்னை - சேலம் 8 வழிச்சாலை முக்கியமா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
இவ்வாறு கூறி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.