கோவை: புதியதலைமுறை செய்தியாளர் மீது கோவை மாநகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததைக் கண்டித்து கோவையில் அனைத்து பத்திரிகையாளர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை: புதியதலைமுறை செய்தியாளர் மீது கோவை மாநகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததைக் கண்டித்து கோவையில் அனைத்து பத்திரிகையாளர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடந்த வெள்ளிக்கிழமை கோவை - அவினாசி சாலையில் உள்ள நவ இந்தியா பகுதியில் புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில் விவாத மேடை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் அமீர் பேசுகையில் அங்கிருந்த பா.ஜ.க.,வினர் ரகளையில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பீளமேடு போலீசார், அமீர் மீதும், புதிய தலைமுறை மீதும், அதன் செய்தியாளர் சுரேஷ் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதே போல், விகடன் இணையதள செய்தியில், கோவையில் கள்ள நோட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட நபர், முதலமைச்சருடன் இருப்பது போன்ற செய்தி புகைப்படத்துடன் வெளியானது. இது, தொடர்பாக, ஆனந்த் என்பவர் அளித்த புகாரின் பேரில், விகடன் நிறுவனத்தின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த இரு சம்பவங்களுக்கும், தமிழக அளவில் கடுமையான கண்டனங்கள் எழுந்தது. இந்த நிலையில், தொலைக்காட்சி நிர்வாகத்தின் மீதும், விகடன் பத்திரிக்கை மீதும், புதியதலைமுறை செய்தியாளர் மீது புனையப்பட்ட வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கருப்பு உடை அணிந்தும், வாயில் கருப்பு துணி கட்டியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், ஊடக குரல் வலையை நசுக்கும் வகையில் செயல்படும் மாநகர காவல்துறைக்கு எதிராகவும், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, அங்கிருந்து ஊர்வலமாகச் சென்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர், மாவட்ட ஆட்சியரைச் சந்தித்த பத்திரிகையாளர்கள், தங்களது கோரிக்கைகளை வலியதோடு, மாநில அரசிடம் பத்திரிகையாளர்களின் நிலையை உணர்த்தி உடனடியாக வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றனர்.