கோவை: மேட்டுப்பாளையம் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் காட்டு யானை ஒன்று படுகாயங்களோடு ரத்தம் சொட்ட சொட்ட ஆக்ரோசமாக சுற்றித் திரிவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: மேட்டுப்பாளையம் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் காட்டு யானை ஒன்று படுகாயங்களோடு ரத்தம் சொட்ட சொட்ட ஆக்ரோசமாக சுற்றித் திரிவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சமயபுரம் என்ற பகுதியில் நேற்று நள்ளிரவு உடலில் பலத்த காயங்களோடு காட்டு யானை ஒன்று பலத்த பிளிறல் சப்தத்தோடு சுற்றி வருவதைக் கண்ட மக்கள் இது குறித்து மேட்டுப்பாளையம் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனிடையே, அங்குள்ள விவசாய தோட்டத்திற்குள் புகுந்த காயம்பட்ட யானை வலியால் ஏற்பட்ட கோபம் காரணமாக அங்கிருந்த ஒரு மரத்தை சாய்த்தது. மேலும், ஆக்ரோஷத்தோடு அங்கும் இங்கும் பிளிறியபடி ஓடியது. இதனால் அத்தோட்டப் பகுதி முழுவதுமே யானையின் ரத்தக்கரையாக காட்சியளிக்கின்றது.

தகவல் கிடைத்து வனத்துறையினர் வரும் முன்பே காயம் பட்ட யானை அங்குள்ள தென்னை மற்றும் பாக்கு தோட்டங்களை கடந்து அருகில் உள்ள புதர்க்காட்டு பகுதிக்குள் சென்றது. இதனையடுத்து, இன்று காலை மீண்டும் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்திய பின்பு யானையின் ரத்த சிதறல்களை பின்தொடர்ந்து சென்றனர்.
இதன் மூலம் அந்த யானை, அருகில் உள்ள நெல்லிமலையடிவார வனப்பகுதிக்குள் யானை சென்றுள்ளதை உறுதிசெய்துள்ள வனத்துறையினர், உடலில் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளதால் வேதனையில் தவிக்கும் யானையின் அருகே செல்வது ஆபத்து என்பதால் தற்போது வரை அதன் நடமாட்டத்தை மட்டும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
யானைகளின் இனப்பெருக்க கால நேரங்களில் பெரிய யானைகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு கொள்வது வழக்கம் என்பதால், இதன் காரணமாக இந்த யானை காயமடைந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என யானையின் காயங்களை பரிசோதித்த பின்னரே தெரிய வரும் என்கின்றனர் வனத்துறையினர்.
காயமடைந்து உயிருக்குப் போராடும் யானைக்கு சிகிச்சை அளிக்க இயலுமா? என முயற்சி மேற்கொள்ளும் வனத்துறையினர், இந்த யானை மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடாமல் தடுக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.