கோவை: புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சார்பில் வெள்ளிக்கிழமை கோவை நவ இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரியில் வட்டமேசை விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை: புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சார்பில் வெள்ளிக்கிழமை கோவை நவ இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரியில் வட்டமேசை விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ., செம்மலை, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஞானதேசிகன், தி.மு.க., சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன், பா.ஜ.க., சார்பில் தமிழிசை சவுந்தரராசன், சி.பி.ஐ.(எம்)., சார்பில் கே.பலகிருஷ்ணன், கொங்கு இளைஞர் பேரவை சார்பில் உ.தனியரசு, இந்திய குடியரசுக் கட்சி சார்பில் செ.கு.தமிழரசன் மற்றும் இயக்குநர் அமீர் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில், தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களைப் பற்றியும் அதன் பின்னணி குறித்தும் கட்சித் தலைவர்கள், தங்களது கருத்துகளை முன்வைத்தார்கள். அப்போது, இயக்குநர் அமீர் பேசத் தொடங்கிய உடன் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
பா.ஜ.க.,வினர் அமீருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி அரங்கில் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் வட்டமேசை நிகழ்ச்சி நடந்த அரங்கின் நிர்வாகியிடம் சனிக்கிழமை புகாரை பெற்ற பீளமேடு போலீசார், தொலைக்காட்சி நிர்வாகத்தின் மீதும் அதன் கோவை செய்தியாளர் சுரேஷ் மற்றும் இயக்குனர் அமீர் மீதும் 153 ஏ ( இரு குழுக்களிடையே பிரிவினையைத் தூண்டுதல்), 505( பொதுமக்களிடையே அமைதியைக் குலைத்து , அரசுக்கு எதிராக நடந்து கொள்ளுதல்) மற்றும் 3(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த சூழலில், ஊடகங்களை மிரட்டும் போக்கில் தமிழக அரசு செயல்படுவதாக கூறி கோவை பத்திரிக்கையாளர் மன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும், வழக்கை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதே போல், சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றம் உட்பட தமிழகத்திலுள்ள பல்வேறு பத்திரிகையாளர்கள் சங்கங்களும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

