நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்தாண்டை விட 30 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளதாக இந்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி மணிவண்ணன் தெரிவித்தார்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்தாண்டை விட 30 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளதாக இந்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி மணிவண்ணன் தெரிவித்தார்.
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் இறுதியில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி செப்டம்பர் மாதம் வரை மழை பெய்யும். இந்த 4 மாதங்களில் பெய்யும் மழையால் மின் உற்பத்திக்கு பயன்படுத்தும் அணைகளான முக்குறுத்தி, அவலாஞ்சி, எமரால்டு, போத்தி, கெத்தை, அப்பர் பவானி, காமராஜர் அணை, பைக்காரா அணைகளின் நீர்மட்டம் அதிகரித்துக் காணப்படும்.
இதேபோல, குடிநீர் ஆதாரங்களான மார்லி மந்து, டைகர் ஹில், பார்சன்ஸ்வேலி, கீழ் மற்றும் மேல் கோடப்மந்து, கீழ் மற்றும் தொட்ட பெட்டா உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து காணப்படும். இதனால், நகரில் குடிநீர் விநியோகம் சீராக இருக்கும். இந்நிலையில், இந்தாண்டு தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் கடந்த சில நாட்களாக உதகை, கூடலூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் அதிகரித்துள்ளது. மழையின் காரணமாக கடுங்குளிர் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் தற்போது அதிகரித்துக் காணப்படும் நிலையில், இந்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி மணிவண்ணன் கூறுகையில், "நீலகிரி மாவட்டத்தின் ஒராண்டுக்கான சராசரி மழையளவு 1.325 மி.மீ., மழையாகும். இதில், தென்மேற்கு பருவ மழை மட்டும் 630 மி.மீ., மழைப் பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவ மழை 345 மி.மீ., மற்றவை 350 மி.மீ., மழையின் அளவாக உள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு 1,392.5 மி.மீ., மழையும், 2015-ம் ஆண்டு 1,400.3 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது. இதன்மூலம், இரு ஆண்டுகளிலும் தலா 5 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. இதேபோல, கடந்த 2016-ம் ஆண்டு 613.8 மி.மீ., மழை மட்டுமே பெய்துள்ளது. இது 53 சதவீதம் குறைவாகும். கடந்தாண்டு 1,324.9 மி.மீ., மழை பெய்துள்ளது. இது சராசரி மழைப் பதிவாகும். இந்தாண்டு தற்போது வரை 400 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இதன்மூலம், 30 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது, என்றார்.