கோவை: இளம் பத்திரிக்கையாளர்களுக்கான வாசிப்பு தன்மையை ஊக்கப்படுத்தும் வகையில், 'வாசிப்பை நேசிப்போம்' என்ற நிகழ்ச்சி கோவை பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது.
கோவை: இளம் பத்திரிக்கையாளர்களுக்கான வாசிப்பு தன்மையை ஊக்கப்படுத்தும் வகையில், 'வாசிப்பை நேசிப்போம்' என்ற நிகழ்ச்சி கோவை பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது.
இளம் பத்திரிக்கையாளர்கள் வாசிப்பு தன்மையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கோவை பிரஸ் கிளப், அறிவுக்கேணி மற்றும் வாங்க படிக்கலாம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது. இன்றைய காலகட்டத்தில் புத்தகத்தின் தேவையையும், அதன் வலிமையையும் இளம் பத்திரிகையாளர்கள் உணரும் வகையில் இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டது.
இதில் அறிமுக உரையாகப் பேசிய எழுத்தாளர் சி.ஆர். இளங்கோவன் கூறும்போது:- நான் கல்லூரி காலம் முடிந்த பின்பு கோவையின் வரலாறு என்று ஒரு புத்தகத்தை எழுதினேன். அதன் தொடர்ச்சியாக வாசகர்கள் இந்தப் புத்தகத்தில் இருந்த கோவையின் தகவல்களை என்னிடம் ஆழமாகக் கேட்டனர் இதனால், இன்னும் தகவல்களை தேடி அலைந்தேன். பின்னர் தொடர்ச்சியாக புத்தகங்கள் எழுதினேன், என்றார்.
தொடர்ந்து, கோவை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். கே. விஜயகார்த்திகேயன் பேசுகையில்," டாக்டர், ஐ.ஏ.எஸ். அதிகாரி, எழுத்தாளர் என்பதை எல்லாம் விட வாசிப்பதின் மூலம் சமூகத்தில் முன்னேறிய மாணவனாக இருப்பதை நான் பெருமை கொள்கிறேன். சமூக விழிப்புணர்வுக்கு சாவியாக இருப்பது புத்தகம்தான். ஆகவே, வாசிப்பை அதிகப்படுத்த வேண்டும். இன்றைய காலகட்டத்தில் தகவல் என்பது ஒரு ஆயுதமாக உள்ளது," இவ்வாறு கூறினார்.

தேசிய விருது பெற்ற பத்திரிக்கையாளர் சே. சேவியர் செல்வகுமார் கூறியதாவது :- இளம் பத்திரிகையாளர்கள் புத்தகங்களை அதிகமாக வாசிக்க வேண்டும். நாங்கள் இளம் வயதில் படித்த புத்தகங்கள் தான் இன்று எங்களை வளமைப்படுத்தியுள்ளது. துல்லியமாக செய்திகளை பதிவு செய்ய வாசிப்பு அவசியம். "சிறுவாணி புத்தகம்" கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டும், என்றார். இந்த நிகழ்ச்சியில் இளம் பத்திரிக்கையாளர்கள், மாணவர்கள் மற்றும் மூத்த பத்திரிக்கையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
