கோவை: குளத்தை ஒட்டிய பகுதிகளில் குப்பை மற்றும் கழிவுப் பொருட்களை கொட்டிச் செல்லும் பிரச்சனை தொடர்கதையாகி வருகிறது. நேற்றிரவு, உக்கடத்தை அடுத்துள்ள வாலாங்குளக்கரையில் மர்ம நபர்கள் காலாவதியான மாத்திரைகளையும் மருத்துவக் கழிவுகளையும் கொட்டிச் சென்றுள்ளனர்.
கோவை: குளத்தை ஒட்டிய பகுதிகளில் குப்பை மற்றும் கழிவுப் பொருட்களை கொட்டிச் செல்லும் பிரச்சனை தொடர்கதையாகி வருகிறது. நேற்றிரவு, உக்கடத்தை அடுத்துள்ள வாலாங்குளக்கரையில் மர்ம நபர்கள் காலாவதியான மாத்திரைகளையும் மருத்துவக் கழிவுகளையும் கொட்டிச் சென்றுள்ளனர்.

கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள எட்டு குளங்களை 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கோவை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக ரூ.87.88 கோடி மதிப்பீட்டில் உக்கடம் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, முத்தண்ணன் குளம் மற்றும் செல்வ சிந்தாமணி ஆகிய குளங்களை மேம்படுத்துவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆனால், குப்பைக் கழிவுகளை குளத்தில் கொட்டிச் செல்வதை தடுக்க மாநகராட்சி சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குளங்களை சுற்றிலும் கட்டிடக் கழிவு, மருத்துவக் கழிவு, காலாவதியான உணவுப் பொருட்கள் போன்ற பல்வேறு குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.

ஏராளமான தன்னார்வலர்களும் பொதுமக்களும் இணைந்து வாரந்தோறும் குளத்தைச் சுற்றி கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றி குளக்கரைகளை சுத்தம் செய்து வருகின்றனர். ஆனால், குளக்கரையில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.

குறிப்பாக, இரவு நேரங்களில் டன் கணக்கிலான குப்பைகளை மூட்டைகளாக கட்டி மர்ம நபர்கள் லாரியிலிருந்து தூக்கி எரிந்துவிட்டுச் செல்கின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் புகாரளிக்கின்றனர்.

மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன் குளத்தில் படர்ந்திருந்த ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்றிய மாநகராட்சி நிர்வாகத்தினர், அகற்றப்பட்ட ஆகாயத்தாமரைச் செடிகளை அப்புறப்படுத்தாமல் குளக்கரையிலேயே கொட்டிவிட்டுச் சென்றனர். இதனால், குளக்கரைகள் குப்பைமேடாக காட்சியளிக்கின்றன.
மேலும், கொட்டப்பட்ட கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் குளக்கரையை ஒட்டி அமைந்துள்ள சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளும், குளத்தை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
