கோவை: வார்டு எண் 12 மற்றும் 13-க்கு உட்பட்ட ராமலிங்க நகர் பகுதியில் பராமரிப்பின்றி இருந்த பொது இடத்தை பூங்காவாக மாற்ற அப்பகுதி மக்கள் களமிறங்கியுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.
கோவை: வார்டு எண் 12 மற்றும் 13-க்கு உட்பட்ட ராமலிங்க நகர் பகுதியில் பராமரிப்பின்றி இருந்த பொது இடத்தை பூங்காவாக மாற்ற அப்பகுதி மக்கள் களமிறங்கியுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.
கோவை மாநகராட்சியின் மேற்கு மண்டலம், வார்டு எண் 12 மற்றும் 13-க்கு உட்பட்ட ராமலிங்க நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளது. அப்பகுதியில் சுமார் 3 சென்ட் அளவிலான பொது இடம் பராமரிப்பின்றி புதர் மணிடிக்கிடந்தது.

அதனை சுத்தம் செய்ய களமிறங்கிய ராமலிங்க நகர் குடியிருப்பு நல சங்கத்தினர், பில்டிங் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்புடன் இணைந்து பொது இடத்தை ஆக்கிரமித்திருந்த களைச் செடிகளை, குடியிருப்பு வாசிகளின் ஒத்துழைப்போடு சுத்தம் செய்தனர்.
இந்நிலையில், நேற்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுத்தம் செய்யப்பட்ட இடத்தில் மரக் கன்றுகளை நட்டு வைத்தனர்.
இதுகுறித்து ராமலிங்க நகர் குடியிருப்பு நல சங்கத்தின் செயலாளர் விஜயராகவன் பேசுகையில், "சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை குடியிருப்பு சங்கம் சார்பாக நடத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக பயணங்களின் போது குப்பைகளை பொது வெளியில் தூக்கி எரிவதை தடுக்க, சிறிய அளவிலான துணிப்பைகள் குடியிருப்பு வாசிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, பல மாதங்களாக பராமரிப்பின்றி இருந்த பொது இடத்தை சுத்தம் செய்து, மரக் கன்றுகளை நட்டுவைத்துள்ளோம். மேலும், முதியோர்களும், குழந்தைகளும் பயன்படுத்தும் வகையில் இந்த இடத்தை அழகான பூங்காவாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்." என்றார்.
கடந்த வருடம் குப்பை மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்டு 'குப்பையில்லாத குடியிருப்பு பகுதி' என ராமலிங்க நகர் காலனி பெயர் வாங்கியது குறிப்பிடத்தக்கது.