கோவை: மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டி போலீசாரிடம் பிடிபடாமல் இருக்க மது அருந்துவோர் மிதிவண்டி பயன்படுத்தி புதிய யுக்தியை கையாண்டு வருகின்றனர்.
கோவை: மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டி போலீசாரிடம் பிடிபடாமல் இருக்க மது அருந்துவோர் மிதிவண்டி பயன்படுத்தி புதிய யுக்தியை கையாண்டு வருகின்றனர்.

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குறிப்பாக செல்வபுரம், புலியகுளம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம் சாலை, ஆகிய பகுதிகளில் அன்மை காலமாக டாஸ்மாக் கடை, பார் போன்ற பகுதிகளில் மிதிவண்டிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. சிலர் மது அருந்திவிட்டு மிதிவண்டியை எடுத்துச் சென்றனர்.
இது குறித்து மது வாங்க வந்த ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறுகையில், "காவல்துறையின் சோதனை கோவை மாநகரம் முழுவதும் அதிகமாக உள்ளது. மது வாங்கி வீட்டிலோ அல்லது நண்பர்கள் அறையிலோ என்னால் அருந்த முடியாத சூழ்நிலை உள்ளது. பெயிண்டர் வேலை செய்யும் நான் மாலை நேரத்தில் உடல் வலிக்காக மது அருந்துகிறேன். அதுவும் பாரில் தான் அருந்த முடியும். ஆகையால் மோட்டார் பைக்கிற்கு பதிலாக மிதிவண்டியில் வந்து அருந்திவிட்டு செல்கிறேன். காவல்துறை என்னிடம் சோதனை செய்வதில்லை." என்றார்.
மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கினால் தானே பிரச்சினை, மிதிவண்டியில் வந்தால் காவல்துறையால் என்ன செய்ய முடியும் என சில மது பிரியர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.

இன்னும் சிலர் மது அருந்திவிட்டு மிதி வண்டி ஒட்டமுடியாமல் அதனை தடுமாறி தள்ளிக்கொண்டே செல்கின்றனர். இது போன்ற சம்பவங்களால் காவல்துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் அருள்ராஜ் கூறுகையில், "காவல்துறையின் நடவடிக்கையால் அனைவரும் ஓரளவு ஹெல்மட் அணிய ஆரம்பித்துவிட்டனர். குடித்துவிட்டு வண்டி ஒட்டுவதும் ஒரளவு குறைந்து விட்டது. ஆனால், தற்போது மிதிவண்டியைப் பயன்படுத்தி குடிக்க ஆரம்பித்துவிட்டனர். காவல்துறை இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.
இது குறித்து கோவை மாநகர துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித் குமார் கூறுகையில், "மிதிவண்டியில் குடித்துவிட்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்து சட்டத்தில் இடமில்லை. அதே நேரம் அவர்கள் பொது இடங்களில் மது அருந்தினாலோ அல்லது தகராறு செய்தாலோ சட்டம் மற்றும் ஒழுங்கு துறை காவலர்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.
தற்போது நாங்கள் குடித்துவிட்டு மிதிவண்டியில் வருபவர்களிடம் எச்சரிக்கை செய்து வருகிறோம். போக்குவரத்து சட்டத்தில் இது குறித்து மாற்றம் கொண்டு வர வேண்டும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன." என்றார்.