சென்னை: பள்ளி வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் குறித்த அளவுக்கு மேல் மாணவர்களை ஏற்றி பயணிக்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து ஆணையரகம் எச்சரித்துள்ளது.
சென்னை: பள்ளி வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் குறித்த அளவுக்கு மேல் மாணவர்களை ஏற்றி பயணிக்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து ஆணையரகம் எச்சரித்துள்ளது.
கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்காக 30,500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதை தவிர, மாணவர்களை பள்ளிகளுக்கு அழைத்துச் செல்வதற்கு பெரும்பாலும் தனியார் வேன்கள் மற்றும் ஆட்டோக்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அவ்வாறு மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு 16 விதிமுறைகள் உள்ளன. இந்த 16 விதிமுறைகளும் பின்பற்றப்படுகிறதா? என ஆண்டுதோறும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் விதிமுறை மீறல் இருந்தால் வாகனங்களுக்கான பர்மிட்டை ரத்து செய்து போக்குவரத்து ஆணையரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், ஆட்டோ, ஷேர் ஆட்டோ மற்றும் ஆம்னி வேன்களில் அதிக மாணவர்களை ஏற்றிச் செல்வதை கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்து ஆணையரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஆட்டோக்களில் பள்ளி சிறுவர்கள் 4 பேருக்கு மேல் ஏற்றிச் செல்லக்கூடாது. இதேபோல், பெரிய வேன் வகைகளில் 17 பள்ளி சிறுவர்களுக்கு மேல் ஏற்றிச் செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறையை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வாகனங்களின் பர்மிட் சஸ்பெண்ட் செய்து, வாகனங்களையும் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.