நீலகிரி: நீலகிரியில் வாழும் பண்டைய பழங்குடியின மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக, மத்திய, மாநில அரசுகள் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கியபோதும், மழைக்கு ஒதுங்கக் கூட வீடு இல்லாத நிலை இன்றும் பல கிராமங்களில் தொடர்கிறது.
நீலகிரி: நீலகிரியில் வாழும் பண்டைய பழங்குடியின மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக, மத்திய, மாநில அரசுகள் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கியபோதும், மழைக்கு ஒதுங்கக் கூட வீடு இல்லாத நிலை இன்றும் பல கிராமங்களில் தொடர்கிறது.

நீலகிரி மாவட்டத்தில் குறும்பா, தோடர், காட்டுநாயக்கர், இருளர், பனியர், கோத்தர் சமுதாய பழங்குடியின மக்கள் பண்டைய பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர். இவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக பழங்குடியினர் நலத்துறை மூலம் ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டம் மற்றும் ஆண்டுதோறும் உள்ளாட்சி துறை மூலம் நிதி ஒதுக்கப்படுகிறது.

கோடிகள் ஒதுக்கீடு:
அதனடிப்படையில், கடந்த 2014-15-ம் நிதியாண்டில் ரூ. 8.40 கோடியும், 2015-16-ம் நிதியாண்டில் ரூ. 9 கோடியும், 2016-17-ம் நிதியாண்டில் ரூ. 7.30 கோடியும், 2017-18-ம் நிதியாண்டில் ரூ. 17.54 கோடி என மொத்தம் ரூ. 42.24 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர, மாவோயிஸ்ட் சிறப்பு நிதியின் கீழ், பல கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஆனால், இந்த நிதி எங்கே செல்கிறது என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில், கூடலுார், பந்தலுார் பகுதியில் வாழும் பனியர், காட்டுநாயக்கர் சமுதாய மக்கள், பழங்காலத்தைப் போன்றே குடிசை வீடுகளில் வாழ்வதும், அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படுவதும் தொடர்கிறது.

இந்நிலையில், பந்தலுார் அருகே சேரம்பாடியில் உள்ள பழங்குடியின கிராமத்தில் காட்டுநாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வந்தனர். இங்கிருந்த குடிசைகள் மழையால் பாதிக்கப்பட்டதால், கிராமத்து மக்கள் ஒட்டுமொத்தமாக வெளியிடங்களுக்கு சென்றனர். பின்னர், அதிகாரிகள் ஆய்வு செய்து வனத்தில் குடியேறிய இவர்களில், ஏழு குடும்பங்களை மீண்டும் குடியமர ஏற்பாடு செய்தனர்.

இங்கு, சேரங்கோடு ஊராட்சி மூலம் அமைக்கப்பட்ட சோலார் தெருவிளக்கும் சில நாட்களில் செயல் இழந்துகிடந்தது. இதனால், இரவில் மட்டுமின்றி பகல் நேரத்திலும் யானைகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்பட்டது. மாலை, 6.00 மணிக்குள் இரவு உணவை முடித்துக்கொண்டு, அருகிலுள்ள பள்ளி வளாகத்தில் மக்கள் இரவு பொழுதை போக்கி வருகின்றனர். இதனால், இந்தக் கிராமம் விரைவில் அழிந்துபோகும் நிலை உருவாகியுள்ளது.

தங்களின் வாழ்க்கை நிலை குறித்து அங்குள்ள மக்கள் கூறுகையில், "பல முறை உள்ளூர் அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. மாவட்ட நிர்வாகம் மனம் வைத்து, எங்கள் கிராமத்தைக் காப்பாற்ற வேண்டும்," என்றனர்.