கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளைக் கண்டறியும் ஆய்வில் மாநகராட்சியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள 'சூயஸ்' என்கிற தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.
கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளைக் கண்டறியும் ஆய்வில் மாநகராட்சியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள 'சூயஸ்' என்கிற தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.
இதன் முதற்கட்டமாக, வீடு வீடாகச் சென்று குடிநீர் பயன்பாடு மற்றும் விநியோக அளவு பற்றிய தகவல்களை திரட்டும் பணிகளை தனியார் நிறுவனம் செய்து வருகின்றது. கடந்த மாதம் தொடங்கப்பட்ட இந்த ஆய்வில், அணைகளில் இருந்து தற்போது பெறப்படும் குடிநீர் அளவு, குடியிருப்புகள் மற்றும் வர்த்தக இணைப்புகளுக்கு விநியோகிக்கப்படும் அளவுகள் குறித்த தகவல்கள் கண்டறியப்படுகின்றன. இதற்காக, மூன்று குழுக்கள் சூயஸ் நிறுவனத்தால் நியமிக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த ஆய்வில், வீட்டின் உரிமையாளர் பெயர், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, குடிநீர் இணைப்பு எண், எத்தனை நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வருகிறது, குடியிருப்பு பகுதியின் மொத்த மக்கள் தொகை, வர்த்தக இணைப்புகளின் எண்ணிக்கை போன்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டு பதியப்படுகிறது.
குடியிருப்பு மற்றும் வர்த்தக இணைப்பு என்று மொத்தம் இரண்டு லட்சம் இணைப்புகளுக்கு மட்டுமே மாநகராட்சி அதிகாரப்பூர்வ இணைப்பு வழங்கியுள்ளது. ஆனால், நகரின் ஏராளமான பகுதிகளில் மாநகராட்சி அனுமதியின்றி உருவாக்கப்பட்டுள்ள இணைப்புகளால் பல லிட்டர் குடிநீர் திருடப்படுகிறது.
இதைக் கண்டறிந்து தக்க நடவடிக்கைகள் எடுக்கவும், குடிநீர் விநியோகத்தை சீர் செய்யவும் தற்போது நடத்தப்பட்டு வரும் ஆய்வின் முடிவுகள் உதவும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.