கோவை: கோடை விடுமுறை முடிந்து, புத்தாடை அணிந்து முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய வைத்துள்ளது கிணத்துக்கடவு பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளி நிர்வாகம்.
கோவை: கோடை விடுமுறை முடிந்து, புத்தாடை அணிந்து முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய வைத்துள்ளது கிணத்துக்கடவு பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளி நிர்வாகம்.

கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் +2 வரை வகுப்புகள் உள்ளது. இருபாலர் பள்ளியான இங்கு 50 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். சுமார் 2,500 மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து முதல் நாள் பள்ளிக்கு புதிய ஆடைகளை அணிந்தும், புதிய பைகளையும் எடுத்து வந்த மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் சுத்தம் செய்யப்படாத பள்ளி வளாகத்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தூசி படிந்து, குப்பைகள் நிறைந்த வகுப்பறைகள், சுத்தம் செய்யப்படாத தண்ணீர் தொட்டி, துர்நாற்றம் வீசும் கழிப்பறை, காய்ந்த இலைகள் நிறைந்த படிக்கட்டுகள் என பராமரிப்பில்லாத பழைய கட்டிடமாக காட்சியளித்துள்ளது இந்தப் பள்ளி வளாகம். இதுபற்றி பள்ளி தலைமை ஆசிரியரிடம் அவர்கள் முறையிட்ட போது, சுத்தம் செய்யும் பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால், மாணவர்களையும், பெற்றோர்களையும் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

முதல் நாளே வீடு திரும்ப மனமில்லாமல், குப்பை நிறைந்த வகுப்பறைகளையும், சுத்தம் செய்யப்படாத குடிநீர் தொட்டிகளையும், புதிய வகுப்பில் அமரப் போகும் கனவுடன் புத்தாடை அணிந்து வந்த மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் சுத்தம் செய்துள்ளனர்.

இதுகுறித்து, அப்பள்ளியில் பயிலும் மாணவரின் பெற்றோர் ஒருவர் கூறியதாவது :- கோடை விடுமுறை தொடங்கும் முன்பு பள்ளி துப்புரவு பணிகளுக்காக ஒவ்வொரு மாணவர்களிடம் இருந்தும் தலா ரூ. 10 பள்ளி நிர்வாகத்தால் வசூலிக்கப்பட்டது. குறைந்தது ரூ. 20,000 வசூலிக்கப்பட்டு இருக்கும். அதில், சரிபாதி தொகையை செலவு செய்திருந்தால்கூட இன்று கல்வி கற்க முதல்நாள் பள்ளிக்கு வந்த மாணவர்கள் துடைப்பம் எடுத்திருக்க மாட்டார்கள்.

மாணவர் நலனில் அக்கறையில்லாத பள்ளி நிர்வாகத்தை எதிர்த்து பெற்றோர்களால் குரல் கொடுக்க முடியவில்லை. தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் அளவிற்குப் பொருளாதாரமும் இல்லை. குழந்தைகளின் நலன் கருதி அவர்கள் சொல்வதை செய்ய வேண்டியுள்ளது, என்றார்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதற்கு முன்பு, பள்ளி வளாகம் சுத்தம் செய்யப்பட்டு பராமரித்திருக்க வேண்டும் என்ற கல்வித் துறையின் சுற்றறிக்கையை, இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் படிக்கவில்லையா..?. மாணவர் நலனில் அக்கறை இல்லாமல் இதுபோன்று செயல்படும் பள்ளி நிர்வாகங்களின் மீது கல்வி அதிகாரிகளின் நடவடிக்கைதான் என்ன..? இல்லை, சுற்றறிக்கை அனுப்புவதோடு தங்களின் கடமை முடிந்துவிட்டது என எண்ணுகிறதா பள்ளிக்கல்வித்துறை ..?
புத்தாடை அணிந்தும், புதிய கனவுகளுடனும் பள்ளிக்கு வந்த மாணவர்கள்கூட, இருக்கும் இடத்தை தூய்மையாக வைக்க முகம் சுழிக்காமல் செய்யும் இதுபோன்ற பணிகளை, வாழ்க்கை நெறிகளை கற்றுத் தரும் ஆசிரியர்களுக்கு ஏன் தோன்றவில்லை..?