வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் இந்த ஆண்டு கோடை விழா நடைபெறாததால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் இந்த ஆண்டு கோடை விழா நடைபெறாததால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
7-வது சொர்க்கம் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தேயிலை, காப்பி பயிரிடப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் தேயிலை மற்றும் காப்பி தோட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதியோடு, பசுமையாகவும் வெள்ளிக்கொடி போல் கண்களுக்கு விருந்தளிக்கும் பல அருவிகளின் ரம்மியான காட்சியும் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரும் வகையில் அமைந்துள்ளது.

குறிப்பாக, சோலையார் அணை, நீரார் அணை, சின்னக்கல்லார் அணை, கூழாங்கல் ஆறு, நலமுடி காட்சி முனை, சக்தி தலநார் காட்சிமுனை, பிர்லா பால்ஸ், பாலாஜி கோவில், அக்காமலை புல்மேடு என இன்னும் ஏராளமான சுற்றுலாத்தலங்கள் வால்பாறையில் காணப்படுகிறது. இந்தப் பகுதிகளை காண பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வால்பாறைக்கு பல ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இங்கு ஆண்டுதோறும் கோடைகால விடுமுறையான மே மாதத்தில் கடைசி வாரம் கோடைவிழா நடத்துவது வழக்கமாகும். ஆனால், இந்த வருடம் மே மாதம் இறுதி வாரம் ஆகியும், இதுவரையிலும் கோடை விழா நடத்துவது பற்றி அரசு சார்பில் எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. இதனால், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வால்பாறை பகுதியில் குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் எந்த ஒரு பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாத நிலையில், வருடந்தோறும் நடைபெறும் கோடை விழாவில் நடத்தப்படும், கலைநிகழ்ச்சி மற்றும் பல்வேறு துறைகளால் நடத்தப்படும் கண்காட்சி போன்றவற்றை கண்டு மகிழ்ச்சிடைந்து வந்தனர். இந்நிலையில், இந்த வருடம் கோடைவிழா நடத்தப்படாதது தங்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, அடுத்த ஆண்டு மே மாதம் முதல் வாரத்திலேயே கோடை விழா நடத்த வேண்டும் என்று பள்ளிக்குழந்தைகளும், பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.