சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துவிட்டு, சென்னையில் செய்தியாளர்களிடம் ஒருமையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்திற்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கடும் கண்டம் தெரிவித்துள்ளது.
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துவிட்டு, சென்னையில் செய்தியாளர்களிடம் ஒருமையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்திற்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கடும் கண்டம் தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆறுதல் தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்து, போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால், கலவரம் நிகழ்ந்ததாக அவர் கூறினார். மேலும், செய்தியாளர்கள் தொடர்ந்து, கேள்வி எழுப்பியதால், நிதானத்தை இழந்த ரஜினி, "ஏய் ஏய் வேற ஏதாவது கேள்வி இருக்கா..?" என ஆவேசமாக கேட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக ரஜினி கூறிய கருத்திற்கு பல்வேறு தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்திற்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கடும் கண்டம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- பொது வாழ்க்கைக்கு வருபவர்கள் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை குணங்களை நடிகர் ரஜினிகாந்த் வளர்த்துக் கொள்ள வேண்டும். கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை அவருக்கு இந்த நேரத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். பத்திரிக்கையாளர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட ரஜினிகாந்தின் செயலை சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.
உடனடியாக, நடிகர் ரஜினிகாந்த் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனச் சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் அவரை வலியுறுத்துகிறது, என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.