கோவை: சிங்காநல்லூர் அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து கள்ளிமடை செல்லும் சாலை முற்றிலும் சேதமடைந்து மணல் குவியலாகவும், சேறும், சகதியுகமாக உள்ளது.
கோவை: சிங்காநல்லூர் அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து கள்ளிமடை செல்லும் சாலை முற்றிலும் சேதமடைந்து மணல் குவியலாகவும், சேறும், சகதியுகமாக உள்ளது.
சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்த கிராமம் மாநகராட்சியின் 63-வது வார்டில் உள்ளது. நஞ்சுண்டாபுரம், போத்தனூர் ஆகிய பகுதிகளுக்கும் இது இணைப்பு சாலையாக பயன்படுகிறது. ராஜவீதி, நடுவீதி, அனைக்காடு போன்ற பகுதிகளுக்கு இச்சாலை வழியாகத் தான் செல்ல வேண்டும் சுமார் ஆயிரம் குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன.
இச்சாலையில் பயணிப்பது வெயில் காலங்களில் பாலைவனத்தில் பயணிப்பது போலும், மழைக் காலங்களில் குளங்களில் பயணிப்பது போலும் உள்ளது என இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து இப்பகுதியில் வசித்து வரும் பாலதண்டபானி கூறுகையில், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டத்திற்காக இச்சாலை முற்றிலும் தோண்டப்பட்டது. தற்போது பாதாள சாக்கடை திட்டம் நிறைவடைந்துவிட்டது ஆனால் சாலை சீரமைக்காமல் மணல்களைக் கொண்டு மூடியுள்ளனர். வாகனங்களில் சென்றால் மணல்களில் சக்கரங்கள் சிக்கிக்கொள்கின்றன, இதனால் வாகனங்கள் பழுதடைகின்றன. குண்டும் குழியுமாக சாலையில் பயணிப்பதால் உடல் நலக்குறைவு, முதுகு வலி போன்றவையும் வருகிறது. பல முறை மாநகராட்சிக்கு மனு கொடுத்தும் எந்த பயனுமில்லை." என்றார்.

இதே பகுதியில் அரசு ஆரம்பப் பள்ளியும் செயல்படுகிறது. கோடை விடுமுறை முடிந்து விட்டால் சிறுவர், சிறுமியர்கள் பள்ளிக்கு வருவார்கள் பள்ளி முன்பு உள்ள சாலை சாக்கடை நீர் கலந்து முற்றிலும் சகதியாக உள்ளது. இதனால் சிறுவர், சிறுமியர் மிகவும் பாதிப்படைவார்கள் அதே சமயம் சுகாதார சீர்கேடும் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.
"பள்ளி குழந்தைகளுக்கு சிறந்த சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. சாலையை கடந்து செல்லவே குழந்தைகள் மிகவும் அவதிப்படுகின்றனர். மாநகராட்சி உடனடியாக இச்சாலையை சீரமைத்து தரவேண்டும்." என்றார் அப்பகுதியைச் சேர்ந்த வேலுமணி.

கள்ளிமடை கிராமம் செல்லும் வழியில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளதால் தற்போது அச்சாலையில் நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் என போக்குவரத்து மிகுந்த பகுதியாக காணப்படுகிறது. சில நேரத்தில் சேற்றில் சிக்கி நான்கு சக்கர வாகனங்கள் விபத்துக்கும் உள்ளாகின்றன என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து இப்பகுதியில் வசித்து வரும் தனியார் நிறுவன காவலாளியான வீரமணி கூறுகையில், "தற்போது இச்சாலை மிகவும் பரப்பாக உள்ளது. அருகில் பல அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடங்கள் வந்துவிட்டன. அதனால் அதிக அளவில் நான்கு சக்கர வாகனங்கள் பயணிக்கின்றன. சாலை மோசமாக உள்ள காரணத்தினால் சில நேரங்களில் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது. இதற்கு மாற்று சாலையும் இல்லாத காரணத்தினால் மிகுந்த சிரமமாக உள்ளது." என்றார்.

இது தொடர்பாக மாநகராட்சி ஊழியர் ஒருவர் கூறுகையில், "பாதாள சாக்கடை திட்டம் நிறைவடைந்து ஒரு ஒரு பகுதியாக சாலை போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு விரைந்து சாலை அமைக்கக் கோரி அறிவுறுத்தியுள்ளோம்." என்றார்.