ஊதிய உயர்வு கோரி வங்கி ஊழியர் சங்கங்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை: ஊதிய உயர்வு கோரி வங்கி ஊழியர் சங்கங்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வங்கி அலுவலர்களுக்கு 2 சதவீத ஊதிய உயர்வு அளிப்பதாக இந்திய வங்கிகள் சங்கம் முன்வைத்த பரிந்துரையை வங்கி ஊழியர் சங்கம் ஏற்கவில்லை. இதற்கு முன், கடந்த நவம்பர் 2012-ஆம் ஆண்டு நவம்பர் 1 முதல் 2017-ஆம் ஆண்டு அக்டோபர் 31 வரையிலான காலகட்டத்தில் 15 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்பட்டதாகத் தெரிவித்த ஊழியர் சங்கத்தினர், பிரதமரின் ஜன்தன் வங்கிக் கணக்கு திட்டம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை, முத்ரா கடனுதவி திட்டம், அடல் ஓய்வூதிய திட்டம் போன்ற அரசின் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக வங்கி ஊழியர்கள் ஓய்வின்றி பணியாற்றியதாகக் கூறினர்.
மேலும், கடந்த 3 ஆண்டுகளில் வங்கி ஊழியர்களின் பணிச்சுமை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாகவும், தற்போது ஊதிய உயர்வு தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கம் அளித்திருக்கும் பரிந்துரை போதுமானதாக இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதைக் கண்டித்து நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக 9 வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்தன. அதன்படி, இன்று (மே 30) மற்றும் நாளை அந்தப் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஏறத்தாழ 10 லட்சம் வங்கி ஊழியர்கள் இதில் பங்கெடுத்துள்ளதாக சங்கங்கள் தெரிவித்துள்ளன. அவ்வாறு ஊழியர்களில் பெரும்பகுதியினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் வங்கிச் சேவைகள் கடுமையாகப் பாதிக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ரூ.300 கோடி உள்பட நாடு முழுவதும் சுமார் ரூ. 2,000 கோடி வங்கி வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தின் தாக்கம், பணப் பரிவர்த்தனைகளிலும், ஏ.டி.எம்., சேவைகளிலும் எதிரொலிக்கக்கூடும் என்று வங்கி ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.