கோவை: கோவையில் வீசிய பலத்த காற்றுக்கு பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் திருத்தேர் நிறுத்தும் அரங்கின் மேற்கூரை சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவையில் வீசிய பலத்த காற்றுக்கு பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் திருத்தேர் நிறுத்தும் அரங்கின் மேற்கூரை சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த கோவில்களில் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயமும் ஒன்று. திருப்புகழ் பாடப்பெற்ற இக்கோவிலில் திருத்தேரும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஆண்டுதோறும், பங்குனி மாதத்தில் உத்திர தேர்த்திருவிழாவின் போது மட்டுமே, தேர் அப்பகுதியை வலம் வரும். மற்ற நேரங்களில் கோவிலுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருக்கும்.

இந்த நிலையில், பேரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சூறைக் காற்று வீசியது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதனிடையே, பட்டீஸ்வரர் ஆலயத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த தேரின் திருப்பனை எனப்படும் மேற்கூரை காற்றுக்கு பறந்து சென்று விழுந்தது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாகக் கோவிலிற்கு சுவாமி கும்பிட வந்தவர்கள், அங்கு கடை வைத்திருப்பவர்கள் என பொதுமக்கள் யாரும் எவ்வித காயமுமின்றி தப்பினர்.

இதைத் தொடர்ந்து, இது தொடர்பாக அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில், கோவில் நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று கயிரைக் கட்டி, அங்கு யாரும் நுழையாதவாறு தடுத்து நிறுத்தினர். பின்னர், அந்த தடுப்பனை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது :- சுமார் 2 மணியளவில் பலத்த காற்று வீசியது. இதனால், கோவிலின் மேற்கூரை சரிந்து விழுந்தது. இது தொடர்பாக கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தோம். அவர்கள் விரைந்து வந்து மின்கம்பத்தில் கயிறு கட்டி, பொதுமக்கள் யாரையும் நுழையாமல் தடுத்தனர். பின்னர், மேற்கூரைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர், என்றார்.
இதனிடையே, பழம் பெருமை மிக்க பட்டீஸ்வரர் ஆலயத்தில் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Video: M.Balaji