நீலகிரி: கோடை சீசன் முடிந்த நிலையில், பராமரிப்பு பணிக்காக ஊட்டி தாவரவியல் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டது.
நீலகிரி: கோடை சீசன் முடிந்த நிலையில், பராமரிப்பு பணிக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் இருந்த கண்ணாடி மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டது.

ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள நான்கு கண்ணாடி மாளிகைகளில், மலர் செடிகள், பெரணி தாவரங்கள், கள்ளிச் செடிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்ணாடி மாளிகைகள் பழுதடைந்ததை அடுத்து, கோடை சீசனுக்குள் கண்ணாடி மாளிகையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்காக, 2.61 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அவசர கதியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், தற்போது, பெய்து வரும் மழையின் போது, கண்ணாடி மாளிகையில் பல பகுதிகள் ஒழுகி, தரை தளத்தில் மழை நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக கண்ணாடி மாளிகையை ரசிக்க வந்த சுற்றுலா பயணிகள் உள்ளே செல்ல முடியவில்லை.
அவசர கதியில் மேற்கொள்ளப்பட்ட பணியால் இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர் சிவசுப்ரமணிய சாம்ராஜ் கூறுகையில், ''கண்ணாடி மாளிகை பணி முழுமை பெறவில்லை. மலர் கண்காட்சியையொட்டி சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு தற்காலிகமாக திறக்கப்பட்டது. தற்போது, பணியை முழுமையாக மேற்கொள்ள கண்ணாடி மாளிகை மூடப்பட்டுள்ளது." என்றார்.