தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்காக நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதை சிப்காட் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்காக நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதை சிப்காட் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஸ்டெர்லைட் ஆலையை இனியாவது நிரந்தரமாக மூடுவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கண்ணீர்மல்க தெரிவித்தனர். இதையடுத்து, பொதுமக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பு அளிக்கும் வகையில், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. இது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டது. இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிகளுக்கான (2வது யூனிட்) நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதை சிப்காட் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. 342 ஏக்கர் சிப்காட் நிலம் ஒதுக்கீடு செய்தது ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், நிலத்திற்காக ஸ்டெர்லைட் ஆலையிடம் இருந்து பெறப்பட்ட பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என்றும் சிப்காட் கூறியுள்ளது.
இதனிடையே, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி., டி.கே. ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.