கோவை: சட்டமன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பிரச்சினையை எதிர்கொள்ள முடியாது என்பதால் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி இருப்பதாக டி.டி.வி. தினகரன் ஆதரவாளரான புகழேந்தி தெரிவித்துள்ளார்.
கோவை: சட்டமன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பிரச்சினையை எதிர்கொள்ள முடியாது என்பதால் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி இருப்பதாக டி.டி.வி. தினகரன் ஆதரவாளரான புகழேந்தி தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
சட்டமன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பிரச்சினையை எதிர் கொள்ள முடியாது என்பதால் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு நேற்று சீல் வைத்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது நிரந்தரமானதாக இருக்க வேண்டும்.
கோவையில் முன்னாள் எம்.எல்.ஏ., சேலஞ்சர் துரை உட்பட 50 அ.ம.மு.க.,வினர் மீது பொய் வழக்கு போடப்பட்டு இருக்கின்றது. காவல் துறையினர் மனசாட்சி இல்லாமல் செயல்படுகின்றனர். தவறு செய்த அ.தி.மு.க.,வினர் சிறைக்குச் செல்வார்கள். தூத்துக்குடியில் போராடியவர்கள் தீவிரவாதிகள் என்று சொன்னால், இறந்தவர்களுக்கு எதற்கு தமிழக அரசு சார்பில் நிதி உதவி செய்யப்படுகின்றது? தூத்துக்குடி பிரச்சினையில் ஊடகங்கள் செய்தி வெளியிடாமல் ஒடுக்கப்படுகின்றது.
நடிகை ஸ்ரீ தேவி மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இதுவரை கருத்து தெரிவிக்காமல் ஏன் அமைதியாக இருக்கின்றார்? தூத்துக்குடியில் மருத்துவமனைக்குள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செல்லும் போது ஊடகங்களை அனுமதிக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் அமைச்சர்களை திட்டுவார்கள் என்பதாலேயே ஊடகங்களை அவர்கள் அனுமதிக்கவில்லை.
தூத்துக்குடி இன்னும் அமைதியான நிலைக்கு வரவில்லை. தமிழக அரசு மக்களை ஏமாற்றுகின்றது. கோவை போலீசாரால் காக்கிச்சட்டையின் மரியாதை போய்விட்டது. டி.டி.வி., தினகரனின் ஆதரவாளர்களை காவல் துறையின் மூலம் ஆட்சியாளர்கள் ஒடுக்க நினைக்கின்றனர். அது நடக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.