கோவை: உடல்நலக் குறைவு ஏற்பட்டால் ஏழை-எளிய மக்கள் உடனே செல்வது அரசு மருத்துவமனைகளுக்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் தான். ஆனால், இவை இரண்டுக்கும் இடையே நமது மாநகராட்சியால் நிர்வகிக்கப்படும் இலவச மருந்தகங்கள் கோவையில் 11 இடங்களில் செயல்படுவது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
கோவை : உடல்நலக் குறைவு ஏற்பட்டால் ஏழை-எளிய மக்கள் உடனே செல்வது அரசு மருத்துவமனைகளுக்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் தான். ஆனால், இவை இரண்டுக்கும் இடையே நமது மாநகராட்சியால் நிர்வகிக்கப்படும் இலவச மருந்தகங்கள் கோவையில் 11 இடங்களில் செயல்படுவது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
தெரிந்து கொள்வோம்
சிறிய உடல் உபாதை என்று அரசு மருத்துவமனைக்கு செல்லும் ஏழை மக்கள், மருத்துவ ஆலோசனை பெறுவதற்கும் இலவச மாத்திரை வாங்குவதற்கும் நீண்ட நெடிய வரிசையில் நின்று சிரமப்பட வேண்டியுள்ளது. இதைத் தவிர்க்கவே மாநகராட்சி சார்பில் இலவச மருந்தகங்கள் தொடங்கப்பட்டது.

கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த இலவச மருந்தகங்களில், ஒவ்வொரு மையத்திலும் ஒரு மருத்துவ அதிகாரி மற்றும் ஒரு மருந்தகர் பணிபுரிகின்றனர். காய்ச்சல், சலி, தும்மல், தலைவலி, மூட்டுவலி, கை-கால் வலி போன்ற சாதாரண நோய்களுக்கு மட்டுமன்றி காசநோய்க்கும் மருத்துவ ஆலோசனைகளும், மருந்துகளும் இந்த மருந்தகங்களில் இலவசமாக வழங்கப்படுகின்றது.

எங்க இருக்கு?
கிராஸ்கட் சாலை, ராமலிங்கம் காலனி, கிருஷ்ணசாமி முதலியார் சாலை, தேவங்கப்பட்டை மெக்ரிக்கர் சாலை, டி.பி.சாலை, திருமால் வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி, ராமநாதபுரம், பாப்பநாயக்கன்பாளையம் மற்றும் புலியகுளம் ஆகிய 11 இடங்களில் இந்த இலவச மருந்தகங்கள் இயங்கி வருகின்றன.
அவசர கால முதலுதவி சிகிச்சைகளும் இங்கு அளிக்கப்படுகிறது. மாத்திரை மற்றும் மருந்துகள் மட்டுமே இங்கு வழங்கப்படுகிறது. ஆனால், ஊசி போடப்படுவதில்லை. மருத்துவ ஆலோசனைகளுக்குப் பின்பு நோய் தாக்கத்தின் தீவிரத்தைப் பொருத்து நோயாளிகள் அரசு மருத்துவமனைக்குச் செல்ல பரிந்துரைக்கப்படுகின்றனர்.

தரமான மருத்துவம்
"எளிய மக்களுக்காக இந்த சேவை தொடங்கப்பட்டாலும், எல்லாத் தரப்பு மக்களும் இங்கு சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர். தரமான மருத்துவ ஆலோசனைகளும் சிகிச்சைகளும் அளிக்கப்படுவதால் தான் அனைத்துத் தரப்பு மக்களின் நம்பிக்கையை இந்த இலவச மருந்தகங்கள் பெற்றிருக்கிறது. ஆனால், இதுபற்றி அறியாத பலர், சாதாரண காய்ச்சல், தலைவலிக்குக் கூட தனியார் மருந்தகங்களுக்குச் சென்று மருத்துவ ஆலோசனையின்றி அவர்கள் தரும் விலை உயர்ந்த மருந்துகளை வாங்கி சிரமப்படுகின்றனர். மாநகரின் மையப் பகுதிகளில் இலவச மருந்தகங்கள் செயல்படுவதால் அனைத்துப் பகுதி மக்களும் இங்கு வந்து முதற்கட்ட மருத்துவ ஆலோசனை பெறலாம்." என்கிறார் ஒரு மருத்துவ அதிகாரி.
காசநோய்
மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் இலவச மருந்தகங்களில், காசநோயால் பாதிக்கப்பட்டோருக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிப்பதோடு, நோயாளிகளுக்கு ஊட்டச் சத்து மிக்க பால், முட்டை ஆகியவற்றை இலவசமாக வழங்கி மாநிலத்தின் மற்ற மாநகராட்சிகளுக்கு முன்மாதிரியாகச் செயல்பட்டு வருகிறது.

ராமநாதபுரம், காந்திபுரம், பாப்பநாயக்கன்பாளையம், செல்வபுரம் மற்றும் டி.பி.சாலை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள இலவச மருந்தகங்களில் காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கென சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. இதனால், அப்பகுதிகளில் வசிக்கும் காசநோயால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.
இது தொடர்பாக, ராமநாதபுரம் மருந்தகத்தில் காசநோய் சிகிச்சை பெற்றுவரும் கணபதி என்பவர் கூறுகையில், "வாரம்தோறும் சூலூரில் இருந்து இங்கு வந்து காசநோய் சிகிச்சை பெற்று செல்கிறேன். தகுதி வாய்ந்த மருத்துவர்களால் சிறப்பான முறையில் மருத்துவ ஆலோசனைகளும் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. காசநோயாளிகளுக்கு உடம்பில் ஊட்டச்சத்து குறைந்து கொண்டே வரும், அதை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகத்தால் இலவசமாக முட்டையும் பாலும் தரப்படுகிறது. கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தும் என்னைப் போன்ற நோயாளிகளுக்கு இந்த இலவச மருந்தகங்கள் வாழ்வதற்கு உறுதுணையாக உள்ளன." என்றார்.
கோரிக்கை
தினமும் காலை 7.30 முதல் 11 மணி வரையிலும், மீண்டும் மாலை 3 முதல் 5 மணி வரை திறக்கப்படும் மாநகராட்சி இலவச மருந்தகங்களில் நாளொன்றுக்கு சுமார் 30 முதல் 40 பேர் வரை மருத்துவ ஆலோசனை பெற்று வருகின்றனர்.
"அரசு விடுமுறை மற்றும் வாராந்திர விடுமுறை நாட்களில் இவை திறக்கப்படுவதில்லை. அந்த நாட்களிலும் சேவை இருந்தால் பயனாக இருக்கும். மேலும், காலை மூடப்படும் நேரம் 11 மணியிலிருந்து மதியம் 1 மணி என்று மாற்ற வேண்டும்" என்று கோரிக்கை வைக்கிறார் டி.பி.சாலையில் அமைந்துள்ள மருந்தகத்தில் சிகிச்சை பெற்றுவரும் 60 வயது முதியவர் முகுந்தன்.
மேலும், சிங்காநல்லூர், காட்டூர், பாப்பநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் மூன்று ஆயுர்வேத இலவச மருந்தகங்களும், கெம்பட்டி காலனி மற்றும் தியாகராய புது வீதி ஆகிய பகுதிகளில் இரண்டும் சித்த மருத்துவ இலவச மருந்தகங்களும் மாநகராட்சியின் கீழ் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களின் உடல் நலத்தை பேணிக்காப்பதை கருத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகத்தால் தொடங்கப்பட்டுள்ள இது போன்ற மருந்தகங்களை மக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது போன்ற நல்ல சேவைகள் இருக்க, எதற்காக தனியாருக்கு கப்பம் கட்ட வேண்டும்.? இனியாவது இந்த மருந்தகங்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்வோமே..!