தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி : தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியைச் சேர்ந்த பொதுமக்கள் 100 நாட்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். 100-வது நாள் போராட்டத்தின் போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட எதிர்ப்பாளர்கள் முயன்றனர். அப்போது, ஏற்பட்ட வன்முறையில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், அப்பாவி பொதுமக்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், பேருந்து மற்றும் இணையதள சேவைகள் முடக்கப்பட்டு, பின்னர் நேற்று முதல் வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு எதிர்ப்பு கிளம்பி வந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையையும் நிரந்தரமாக மூட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனிடையே, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரையின் பேரில், கடந்த 24-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீர் மற்றும் மின்சாரத்தை துண்டித்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து, ஆலையை மூடுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தூத்துக்குடிக்கு சென்று அரசு மருத்துமவனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, அவரிடம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். துணை முதலமைச்சருடன், அமைச்சர் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ ஆகியோரும் சென்று பாதிக்கப்பட்டவர்களைத் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினர். அவர்களுக்கு நிவாரண தொகை காசோலையையும் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கை எடுக்கும்” என்றார்.
இதைத் தொடர்ந்து, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிற்பகல் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஒ பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
