கோவை: நிபா வைரஸ் பரவி வருவதைத் தொடர்ந்து, தரமான பழங்களில் இருந்து தான் ஜூஸ் (பழச்சாறு) போட வேண்டும் என்று ஜூஸ் கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கோவை: நிபா வைரஸ் பரவி வருவதைத் தொடர்ந்து, தரமான பழங்களில் இருந்து தான் ஜூஸ் (பழச்சாறு) போட வேண்டும் என்று ஜூஸ் கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து நிகழும் உயிரிழப்பு சம்பவங்களால் கேரள மாநிலத்தின் அருகாமையில் இருக்கும் கோவையிலும் அந்த நோயின் பீதி தொற்றிக்கொண்டது.
நிபா வைரஸ் ஒரு வகை வௌவால் இனங்களால் பரவுவதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அடிபட்ட அல்லது சேதமடைந்த பழங்களை யாரும் உட்கொள்ள வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி வந்தனர்.
இது தொடர்பாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:-
வௌவால்கள் கடித்த பழங்களால் இந்த நோய் பரவுவதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து தரமான பழங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் உள்ள பழ வியாபாரிகள் சங்கத்தினரிடையே நாங்கள் சந்திப்பு ஒன்றை நடத்தினோம். அப்போது, விலங்குகள், பறவைகள் கடித்த பழங்களையோ அல்லது சொத்தையான பழங்களையோ விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளோம்.

அடுத்தகட்டமாக உக்கடம், பெரிய கடைவீதி மற்றும் டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் பழங்கள் விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகளைச் சந்தித்து, அதனை வலியுறுத்த உள்ளோம்.

ஜூஸ்
அதே போல, தரமான பழங்களில் இருந்து மட்டுமே ஜூஸ் போட வேண்டும் என்று ஜூஸ் கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த இரு தினங்களில் இது குறித்த விழிப்புணர்வை ஜூஸ் கடை பணியாளர்களுக்கு ஏற்படுத்த உள்ளோம். நிபா வைரஸ் தொற்றில் இருந்து காத்துக்கொள்ள சுத்தமாக இருக்க வேண்டும். கைகளை நன்கு கழுவிய பின்னரே உணவு உட்கொள்ள வேண்டும். பழங்களை சுடு தண்ணீரில் கழுவிய பிறகே உட்கொள்ளுங்கள்.

கேரளாவில் நிபா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளது. எனவே கோவையில் யாரும் அச்சப்படத் தேவையில்லை. இது தொடர்பாக யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம். இங்கு நாம் தற்காப்பு நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டு வருகிறோம். ஆகவே யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
என்று அவர் கூறினார்.
கோவை அரசு மருத்துவமனையில், நிபா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருபவர்களை அனுமதிக்க தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக-கேரள எல்லையில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர்.பானுமதி கூறியதாவது:-
கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கேரளாவில் இருந்து எந்த வகையிலும் கோவைக்கு நிபா வைரஸ் பரவி விடக்கூடாது என்பதில் மாவட்ட சுகாதாரத்துறை முனைப்புடன் செயலாற்றி வருகிறது. கேரளா மாநில எல்லைப் பகுதிகளான ஆனைகட்டி மற்றும் வேளந்தாவளம் ஆகிய பகுதிகளில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தில் இருந்து கோவைக்குள் வரும் பயணிகளுக்கு 'நிபா' தொற்று பாதிப்பு உள்ளதா என்பதை கண்காணித்து வருகிறோம். அதே போல், கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்பவர்களை தகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.
கோவை அரசு மருத்துவமனையில் நிபா-வுக்கு தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நிபா வைரசால் பாதிக்கப்பட்ட யாரேனும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டால் அந்த மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.