திருப்பூர் : திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனீக்கள் கொட்டியதில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உள்பட 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனீக்கள் கொட்டியதில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உள்பட 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை என்பதால் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, ஆட்சியர் அலுவலகத்தின் முகப்பு பகுதியில் இருந்த தேன்கூடு திடீரென கலைந்து, அதில் இருந்த தேனீக்கள் அங்கிருந்த பொதுமக்களை தாக்கத் தொடங்கியது. இதனால், குறைதீர்ப்புக் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள் மட்டுமல்லாது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் ஆங்காங்கே சிதறி ஓடினர். இதில், போலீசார் உட்பட 20-க்கும் மேற்பட்டோரை தேனீக்கள் கொட்டியது.
இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக காவல்துறையினரின் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டதோடு, பொதுமக்களை சிறிது நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள்ளேயே பத்திரமாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
கடந்த ஒரு வாரமாக தேன்கூடு பெரிய அளவில் இருந்த நிலையில், அதனை அப்புறப்படுத்தாமல் அலட்சியப்படுத்தப்பட்டதன் காரணமாக இன்று பொதுமக்கள் குறை தீர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த பொதுமக்கள் இந்த தேனீக்கள் தாக்குதலால் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினர்.