கோவை : கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 'காவல்நிலையம் தோறும் நூலகம்' என்ற திட்டத்தை நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்.
கோவை : கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 'காவல்நிலையம் தோறும் நூலகம்' என்ற திட்டத்தை நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்.
பல்வேறு தேவைகளுக்காக காவல்நிலையத்தை அணுகுகின்ற மக்களிடம் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குபடுத்துவதுடன், அவர்கள் காத்திருக்கும் நேரத்தையும் பயனுள்ளதாக மாற்றுவது இத்திட்டத்தின் நோக்கம். கோவையில் இயங்கி வருகின்ற 36 ரோட்டரி சுழற்சங்கள் தங்கள் பகுதியில் அமைத்துள்ள 38 காவல்நிலையங்களில் இந்தத் திட்டத்தை செயல்படுத்திப் பராமரிக்க உள்ளனர்.

இந்த நிலையில், கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 'காவல்நிலையம் தோறும் நூலகம்' திட்டத்தை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடக்கி வைத்தார். மேலும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக மேற்கூரையில் அமைக்கப்பட்டுள்ள சோலார் சக்தி மின்கலனையும் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
பின்னர் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி.அ. பாரி கூறியதாவது :- ஒவ்வொரு காவல்நிலையத்திலும் நூலகங்கள் அமைத்தால், காவல்நிலையங்களே தேவைப்படாமல் போய்விடும். புத்தகங்கள் வரலாற்றின் அடையாளம். தமிழகத்திலேயே காவல்நிலையத்தில் நூலகம் என்ற பெருமை கோவைக்கு உண்டு. பல்வேறு பிரச்சனைகளில் வருபவர்கள் மற்றும் குற்றவாளிகள் புத்தகங்களைப் படிக்கும் போது, அவர்களது வாழ்க்கையில் மாற்றம் கிடைக்கும்." எனக் கூறினார். மேலும், இந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என அவர் அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், "காவல்துறை உங்கள் நண்பன் என்ற வார்த்தை பரவும் போது சமூக விரோதங்கள் குறையும். முதலமைச்சர் அனுமதியுடன் தமிழகம் முழுவதும் இந்தத் திட்டம் செயல்படுத்த முயல்வேன். காவல்நிலையம் வரும் பொதுமக்களை புத்தகங்கள் படிக்க போலீசார் ஊக்கப்படுத்த வேண்டும்," என்றார்.
இந்த விழாவில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பாரி, கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் கார்த்திகேயன், கோவை மாவட்ட காவல் கண்பாணிப்பாளர் மூர்த்தி, கவிஞர். கவிதாசன் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.