கோவை: தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்தனர்.
கோவை: தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து வழக்கறிஞர்கள் 2-வது நாளாக நீதிமன்றத்தையும், விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தையும் புறக்கணித்தனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு தமிழகம் முழுவதும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், விவசாயிகள் கருப்பு துண்டு அணிந்து வந்து தங்களது கண்டத்தைப் பதிவு செய்தனர். மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கூட்டத்தைப் புறக்கணித்து, வெளிநடப்பு செய்தனர்.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சு.பழனிசாமி கூறுகையில், "நீர்வளம், நிலவளம் காக்கப்பட வேண்டும். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் நச்சு ஆலையால், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனை எதிர்த்து போராடிய மக்களுக்குப் பரிசு மழையாக குண்டு மழை பொழிந்துள்ளனர். தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக என்றுமே கோவை மாவட்ட விவசாயிகள் இருப்பார்கள். தொடர்ந்து, தூத்துக்குடி மக்களுக்காகப் போராடுவோம். மத்திய அரசு இந்த விவகாரத்தில் வாய்மூடி மவுனமாக இருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொழிற்சாலையை மத்திய அரசு உடனடியாக மூட வேண்டும்," என்றார்.
இதேபோல, கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இரண்டாவது நாளாக நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர். இதில், சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டம் காரணமாக நீதிமன்ற அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் கோவை நீதிமன்ற வளாகம் முன்பாக வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூத்துக்குடியில் அறவழியில் போராடியவர்களை திட்டமிட்டு துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்திருப்பதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
