கோவை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து கோவை காந்திபுரம் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.,வைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து கோவை காந்திபுரம் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.,வைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும் தி.மு.க., தலைமையிலான எதிர்கட்சிகளின் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து கோவை காந்திபுரம் பகுதியில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும், காந்திபுரம் பகுதியில் ஊர்வலமாக சென்ற அவர்கள், மாநகரப் பேருந்து நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அப்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோசங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினரை போலீசார் கைது செய்தனர். இந்த திடீர் சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனிடையே, தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஸ்டாலின் மீதான இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டித்து கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் தமிழ்மணி தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல, வடகோவையில் மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி தலைமையிலும், ஆவாரம்பாளையத்தில் வட்ட செயலாளர் மகேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்ற சுமார் 300-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
