கோவை: சென்னையில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோவையில் பல்வேறு பகுதிகளில் சாலையில் தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: சென்னையில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோவையில் பல்வேறு பகுதிகளில் சாலையில் தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பேசுவதற்கு அனுமதி மறுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி-யை கண்டித்து சென்னை தலைமைச் செயலகம் முன்பு தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின் தர்ணா போராட்டம் நடத்தினார். அனுமதியின்றி போராட்டம் நடத்தியால் ஸ்டாலின் மற்றும் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை போலீசார் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர்.
இந்த நிலையில், ஸ்டாலினின் கைது நடவடிக்கையைக் கண்டித்தும், மக்கள் நலனை காக்க தவறிய தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோவையில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடகோவை மேம்பாலம் அருகே தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதே போல் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் சிங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதே போல, தி.மு.க.,வினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு கண்டனங்களை வெளிப்படுத்தினர். இவ்வாறு பல்வேறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட தி.மு.க.,வினரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், மேட்டுப்பாளையத்தில் கோவை வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் சி. ஆர். ராமச்சந்திரன் தலைமையில் பேருந்து நிலையம் முன்பு திரண்ட அக்கட்சி தொண்டர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திடீரென ஊட்டி - மேட்டுப்பாளையம் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தின் போது தூத்துக்குடி மக்களின் நலனை பாதிக்கும் நச்சு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோசங்கள் எழுப்பப்பட்டன. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல, நீலகிரி மாவட்டம் உதகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், தமிழக மக்கள் தேர்ந்தெடுத்த அரசு, கலவரத்தை சீர்படுத்தி, மேலும் பல உயிர்களை பலியாக்காமல் தடுக்க வேண்டும் என பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டனர்.

வால்பாறை நகர கழக சார்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரியும், ஸ்டாலினை கைது செய்ததைக் கண்டித்தும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. நகர கழக செயலாளர் கோழிக்கடை கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.